ஜெயலலிதா கைது எதிரொலி – நாகை அதிமுக பிரமுகர் தற்கொலை!
நாகை: நாகையில் அதிமுக பிரமுகர் ஒருவர், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை எதிர்த்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மன வேதனையில் சில தொண்டர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்ட பிரமுகர்:
அந்த வகையில் நாகை மாவட்டத்தில் தற்போது அதிமுக பிரமுகர் தற்கொலை செய்துள்ளார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஓர்குடி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் சம்பந்தம். இவர் ஒரு தீவிர அதிமுக விசுவாசி.
தீர்ப்பினால் மன உளைச்சல்:
இவர் அதிமுக கிளைகழக செயலாளராகவும் இருந்துள்ளார். பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை கேள்விப்பட்டதும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
பூச்சிகொல்லி மருந்தால் உயிரிழப்பு:
இந்த நிலையில் அவர் பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
போலீசார் விசாரணை:
இது குறித்து கீழ்வேளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.