வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு எந்தெந்த மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும்?
நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு இருக்கும் என கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
கோவை: நாகை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு இருக்கும் என கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் அடித்து விளையாடியது. இதன் காரணமாக கேரள மாநிலம் 100 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவை சந்தித்தது.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஹிமாச்சலப்பிரதேசமும் இந்த ஆண்டு பலத்த மழையை எதிர்கொண்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சாதகமான சூழல்
தென் மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் இருப்பதாக இந்திய வானிலை மையம் ஏற்கனவே கூறியிருந்தது.
15 சதவீதம் குறைவு
இந்நிலையில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தை விட 15 சதவீதம் குறைவாக பெய்ததாக தெரிவித்துள்ளார்.
மூன்று மாதங்கள் தொடரும்
இதுதொடர்பாக அந்த காலநிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விடவும் அதிகமாக இருக்கும். கடலோர மாவட்டங்களில் அதிகளவிலான மழை பொழிவை எதிர்பார்க்கலாம். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து நல்ல மழை பெய்யும்.
நாகையில் வெளுக்கும்
அதிகளவாக நாகை மாவட்டம் 924 மில்லி மீட்டருக்கு மேல் வடகிழக்கு பருவமழை பொழிவை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த படியாக சென்னை 767 மில்லி மீட்டர் மழையளவை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் காஞ்சிபுரம்
கடலூர் மாவட்டம் 667 மில்லி மீட்டர் மழையளவை பெறும் என்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
பரவலாக மழை
மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை தனது சராசரி மழையளவான 328 மில்லி மீட்டருக்கு பதிலாக 363 மிமீ மழையை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் 314 மில்லி மீட்டருக்கு பதிலாக 370 மில்லி மீட்டர் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக திருப்பூரில்
மிகவும் குறைந்த அளவாக திருப்பூர் மாவட்டத்தில் 281 மில்லி மீட்டர் மழை பெய்யும். திருப்பூரில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 314 மில்லிமீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு திருப்பூரில் சராசரி அளவைவிட குறைவாக இருக்கும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.