குரல் வளை புற்று நோய் வெற்றிகரமாக அகற்றம் - நாகர்கோவில் அரசு மருத்துவர்கள் சாதனை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் குரல் வளையில் இருந்த புற்றுநோயை அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டீன் வடிவேல் முருகன் கூறியதாவது:

குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த மணி, பள்ளியாடியைச் சேர்ந்த ரெங்கசாமி ஆகியோருக்கு குரல் வளையத்தில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தனர். இதில் மணி கடந்த 6 மாதத்திற்கு முன்பே சிகிச்சைக்கு வந்து புற்று நோய் பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்டார்.
அதன் பிறகு அவர் சிகிச்சைக்கு வரவில்லை. இதனால் நோய் தொற்று அதிகமாகி உணவு குழாயும், மூச்சு குழாயும் பாதிக்கப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மணியின் மூச்சு குழாயினை உணவு குழாயில் இணைத்து அதனை ஒரு வழிப்பாதை போல மாற்றி நவீன ஆபரேஷன் செய்யப்பட்டது.
குரல் வளையத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டு அங்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது. இதையடுத்து நோயாளிகளுக்கு பேச்சுப்பயிற்சிக்கான வால்வுகள் பொருத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. 10 நாட்கள் அளிக்கப்பட்ட பயிற்சியின் மூலம் அவர், இயல்பாக பேசும் நிலைக்கு வந்துள்ளார்.
இந்த வகை ஆபரேஷனை தனியார் மருத்துவமனைகளில் செய்திட ரூபாய் 4 லட்சம் முதல் ரூபாய் 5 லட்சம் வரை செலவாகும்.
ஆனால் இவரின் ஏழ்மையை புரிந்து கொண்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இந்த ஆபரேஷன் இலவசமாக செய்யப்பட்டது. இதனை டாக்டர்கள் பாரதிமோகன், சைரஸ், சுனில், பிஜு, மதன் ராஜு ஆகியோர் கொண்ட குழுவினர் செய்தனர். அவர்கள் செய்த பணி பாராட்டுக்கு உரியது.
பொதுமக்களில் லட்சத்துக்கு 4 பேருக்கே இத்தகைய நோய் தாக்கும். அவர்களில் ஒருவர் இறந்து விடுவார். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சைக்கு வந்தால் அவர்களை காப்பாற்றி விடலாம். புகைப்பிடிப்பது, மதுபழக்கம் போன்றவையே இத்தகைய நோய் தாக்க காரணமாகும். மேலும் பெயிண்டிங் வேலை செய்பவர்களுக்கும், பெட்ரோல் பங்க்கில் பணி புரிபவர்களுக்கும் இந்த நோய் பாதிக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கை செய்கின்றனர்.
இவ்வாறு டீன் வடிவேல் முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications