சிறைத்துறை டிஐஜி பேச்சுவார்த்தைக்கு பலன்: வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் வாபஸ்
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நளினி, சிறைத் துறை டிஐஜி-யின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியிடம் பிற கைதிகள் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்ததாக கூறப்படுகிறது. பிறரிடம் பேசவிடாமல் தனிமை சிறையில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும், சிறையில் சுத்தமான குடிதண்ணீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய சிறையில் நளினி கடந்த 4ம் தேதி நளினி உண்ணாவிரத த்தை தொடங்கினார். சட்டசபையில் சிறைத்துறை மானியக்கோரிக்கையின் மீது விவாதம் நடந்து முடிந்த பிறகு 12ம் தேதி சிறைத்துறை டிஐஜி நேரில் வந்து பேசுவார் என்று கூறினர் சிறை அதிகாரிகள் அவருக்கு வாக்களித்தனர்.
இதையடுத்து நளினி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். டிஐஜி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறி நேற்று முன்தினம் நளினி மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 2வது நாளாக நேற்று உண்ணாவிரதத்தை தொடர்ந்த நளினியை, சிறைத்துறை டிஐஜி ராஜேந்திரன் நேற்று காலை சந்தித்து பேசினார். புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஐஜி ராஜேந்திரன் உறுதியளித்தார். இதையடுத்து நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார்.