என்று தணியும் இந்த போராட்டம்.. நளினியின் இறுதி நம்பிக்கை.. தேசிய மகளிர் ஆணையத்திற்கு உருக்கமான மனு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியின் விடுதலைப் போராட்டத்திற்கு என்று முடிவு வருமோ... அவரும் நீதியின் வாசல் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருக்கிறார். இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது அவரது அயராத போராட்டம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் நளினி. முதலில் இவருக்கு வழங்கப்பட்டது மரண தண்டனை. பல போராட்டங்களுக்கு பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

அதனைப் போன்றே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு வழிகளில் நீதிமன்றங்களில் முறையீடு செய்துப் பார்த்தார். பலன் ஒன்றும் இல்லை. மத்திய மாநில அரசுகளும் ஒன்றும் செய்வதாய் இல்லை.
இந்நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத்திடம் புதிய மனு ஒன்றை அளித்துள்ளார் நளினி. இதற்கான விண்ணப்பத்தை சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி மூலம் அனுப்பியுள்ளார்.
இந்த மனுவில் நளினி எழுதியிருப்பதாவது: 25 ஆண்டு காலமாக சிறையில் இருக்கிறேன். இந்த காலகாட்டத்தில் என்னுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 200 பேர் விடுதலையாகி உள்ளனர். ஆனால் நான் மட்டும் சிறையிலேயே இருக்கிறேன்.
இதனால் உடல் அளவிலும் மனதளவிலும் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். கர்ப்பிணியாக இருந்த போது சிறையில் அடைக்கப்பட்ட எனக்கு குழந்தை பிறந்தது. அவள் இப்போது வளர்ந்து பெண்ணாக நிற்கிறாள். அவளுக்கென்று நான் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது. அவள் முதுமையடைவதற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும். என் விடுதலைக் குறித்து தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
இந்நிலையில்தான், உங்களிடம் விடுதலை கோரி மனு அனுப்புகிறேன். எனது விடுதலை குறித்த கடைசி நம்பிக்கையை உங்களிடம் வைத்துள்ளேன். அரசியலமைப்பின் 72-வது பிரிவை பயன்படுத்தி என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி மனுவில் குறிப்பிட்டுள்ளார்
இந்தக் கோரிக்கை மனுவை அளிப்பதற்கு முன்னர், அவரது வழக்கறிஞர் புகழேந்தியை சிறையில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications