விடுதலை பற்றி முடிவெடுக்கவில்லை.. மத்திய உள்துறை செயலாளர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தன்னுடைய விடுதலை பற்றி முடிவெடுக்கவில்லை என மத்திய உள்துறை செயலாளர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.
சென்னை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தன்னுடைய விடுதலை பற்றி முடிவெடுக்கவில்லை என மத்திய உள்துறை செயலாளர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார். உள்துறை செயலாளருக்கு மூன்று மாதத்துக்குள் தமிழக அரசின் கடிதத்தின் அடிப்படையில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நளினி குறிப்பிட்டுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார் நளினி. ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.இந்த நிலையில் 26 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள தம்மை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435-வது பிரிவின்கீழ் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யமாட்டோம் என்ற தமிழக அரசின் ஆணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார் நளினி. அவர் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்து வருகின்றேன். அரசியல் அமைப்பு சட்டம் 161ன்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தபோதும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435ன்படி சி.பி.ஐ விசாரணை நடத்தியதால் ஆயுள் தண்டனை பெற்றவர்களை மட்டும் விடுதலை செய்ய முடியாது என்கின்றனர். இது தவறானது.என்றுள்ளார்.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதியரசர்கள், இவ்வழக்கில் மத்திய அரசுதான் நளினி விடுதலை குறித்து தீர்மானிக்கும் என வாதிடப்பட்டது.இதுகுறித்து முடிவெடுக்க தங்கள் மத்திய உள்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அவர்களின் விடுதலை தொடர்பாக 3 மாதங்களில் முடிவெடுக்க கோர்ட் கூறியிருந்தது. ஆனால் மூன்று மாதம் கழிந்த பின்பும் இதுவரை மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவிற்குள் முடிவெடுக்கவில்லை என்று நளினி வழக்கு தொடுத்துள்ளார். மத்திய உள்துறை செயலாளர் மீது நளினி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து இருக்கிறார்.