தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற நளினி.. 12 மணி நேர பரோல் முடிந்து வேலூர் சிறைக்கு திரும்பினார்
சென்னை: ராஜிவ் கொலைக் குற்றவாளியான நளினி, 12 மணி நேர பரோலில் வெளியே வந்து தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு பின்னர் வேலூர் சிறைக்கு திரும்பினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடா நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்றவர் நளினி. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பரிந்துரையால் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

தற்போது அவர் பெண்கள் தனிச்சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் முருகன் ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார். ஆயுள் கைதியான நளினியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது.
இந்நிலையில், நளினியின் தந்தையும் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருமான சங்கரநாராயணன் (91) நேற்று நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

அவரது உடல் நெல்லையில் இருந்து சென்னை கோட்டூரில் உள்ள நளினியின் சகோதரர் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை அங்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்நிலையில் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து சிறை அதிகாரிகளுக்கு நளினி, முறைப்படி தகவல் தெரிவித்திருந்தார். நளினியை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாய் பத்மாவதிவும் வேலூர் சிறை அதிகாரிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதையடுத்து தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க நளினிக்கு சிறை நிர்வாகம் 12 மணி நேரம் பரோலில் செல்ல அனுமதி வழங்கியது. அதன்படி, நேற்று காலை அவர் வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே அழைத்து வரப்பட்டார்.
பின்னர், உரிய பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரம் அழைத்து வரப்பட்ட நளினி, தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார். இதனை அடுத்து சுமார் 3.30 மணியளவில் கோட்டூர்புரத்தில் இருந்து வேலூருக்கு கிளம்பினார். மாலை 6.45 அளவில் வேலூர் சென்று அடைந்தார். பின்னர் அவருக்கான சிறையறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள் அதிகம் பேர் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
திருமா, சீமான், ஜவாஹிருல்லா ஆறுதல்:
இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் சங்கரநாராயணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய, பின்னர் நளினிக்கு நேரில் ஆறுதல் கூறினர்.

வைகோ இரங்கல்:
இதேபோல், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அதில், ‘தந்தை உடல்நலக் குறைவால் அவதியுற்று வந்த நேரத்தில் அவரைப் பார்ப்பற்கு மகள் நளினி பரோல் கேட்டபோது, தமிழக அரசு மறுப்புத் தெரிவித்தது.
நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டபோதும் அவரது தந்தையைக் காண பரோலில் செல்ல தமிழக அரசு மனிதாபிமானம் சிறிதும் இன்றி அனுமதி மறுத்துவிட்டது. நளினியின் தந்தை உயிருக்குப் போராடியபோது பரோல் வழங்க அனுமதி மறுத்த ஜெயலலிதா அரசு, தற்போது அவர் மரணம் அடைந்த பிறகும் மூன்று நாள் பரோல் அனுமதி கேட்டதைத் தராமல், 11 மணி நேரமே பரோல் வழங்கி இருப்பது வேதனை தருகிறது.
தந்தையை இழந்து வாடும் நளினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications