ராஜிவ் வழக்கில் சிவராசனை ஏன் பிடிக்க முடியாமல் திணறியது சிபிஐ?... நளினி புத்தகத்தில் திடுக் தகவல்
ராஜிவ் கொலை வழக்கில் சிவராசனை பிடிக்கும் எண்ணமே சிபிஐக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் நளினி.
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எளிதில் பிடித்துவிடக் கூடியவராக இருந்த சிவராசனை பிடிக்கவே முடியாத நபராக வேண்டுமென்றே உருவாக்கியதே சிபிஐதான் என நளினியின் புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல் இடம்பெற்றுள்ளது.
"ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்" என்ற பெயரில் நளினி பல்வேறு சம்பவங்களை தொகுத்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் இதனை தொகுத்து, யாழ் பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் மூலமாக நாளை வெளியிடுகிறார். சென்னையில் நாளை நடைபெறும் வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மே 23-ந் தேதி முதல்..
இப்புத்தகத்தில் சிவராசன் தொடர்பாக நளினி எழுதியுள்ள தகவல்களின் தொகுப்பு:
1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். மே 23-ந் தேதியன்று தஞ்சாவூரில் சங்கர் என்ற விடுதலைப் புலி கைது செய்யப்பட்ட நாளிலேயே சிவராசன் பெயர் அடிபட தொடங்குகிறது.

நூலிழையில் தப்பினாராம்...
ஏறத்தாழ 65 நாட்கள் சிவராசனை 'வெறும்' கண்காணிக்கவே மட்டுமே செய்ததாக சொல்லுகிறது சிபிஐ.. மேலும் பல ஆவணங்களில் சிவராசனை நெருங்கியது போலவும் நூலிழையில் அவர் தப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்...
உண்மையில் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை நடந்த மல்லிகைக்கு சிவராசன் பற்றி ஏராளமான தகவல்கள் கிடைத்தன. ஆனால் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவே இல்லை.

கண்காணிப்புதான்...
சுபாசுந்தரம், நான், என் கணவர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்ட சம்பவங்களில் எல்லாம் சிவராசனையும் இணைத்திருக்கிறார்கள்... எல்லோரும் பிடிபட்ட போதும்கூட சிவராசனை மட்டும் 'கண்காணிக்கதான்' செய்தார்கள்.

சிவராசன் தற்கொலைக்காக...
பெங்களூருவில் சிவராசன், சுபா உள்ளிட்டோர் பிடிபட்டும் அவர்கள் தற்கொலை செய்வதற்காக 20 மணிநேரம் காத்திருந்தார்கள்... நினைத்திருந்தால் மயக்கம் மருந்தை 1 மணிநேரத்தில் அவர்களால் கொண்டுவந்திருக்க முடியும். அவர்கள் சிவராசனின் தற்கொலைக்காக காத்திருந்தார்கள்.

பிடிக்க முடியாத நபர்...
இவ்வழக்கில் தொடக்கம் முதலே சிவராசனை பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் சிபிஐக்கு இருந்ததே இல்லை.. சிவராசனை எளிதாக பிடித்திருக்க முடியும்தான்.. ஆனால் வேண்டுமென்றே அவரை தப்ப வைத்து பிடிக்க முடியாத நபராக உருவாக்கினர் கார்த்திகேயன் தலைமையிலான சிபிஐ விசாரணை அதிகாரிகள்.
இவ்வாறு புது குண்டுகளை வீசுகிறது நளினியின் புத்தகம்.












Click it and Unblock the Notifications