ராஜீவ் கொலை வழக்கு... 25 ஆண்டு சிறைவாச சுயசரிதையை வெளியிடுகிறார் நளினி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி, தனது 25 ஆண்டு சிறைவாச சுயசரிதையை வெளியிட உள்ளார்.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி எழுதிய சுயசரிதை வரும் 24ம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் இருந்து வருகிறார். கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்யுமாறு பல்வேறு வழியில் நீதிதுறையின் மூலம் போராடி அவர் வருகிறார். இந்த நிலையில் சுயசரிதை ஒன்றை எழுதியுள்ளார் நளினி.
500 பக்கங்களை கொண்ட இந்த சுயசரிதையில் தனது குழந்தைப் பருவம் தொடங்கி, முருகனுடன் காதல் ஏற்பட்டது, அவரை திருமணம் செய்துகொண்டது, கருவுற்றது, குழந்தை பிறந்தது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கியது, பெரும்புதூரில் நடந்தது என்ன? கைது செய்யப்பட்டு, கடுமையான விசாரணைகளை எதிர்கொண்டது, சிறைக் கொடுமைகள், தொடர்ந்து 25 ஆண்டுகளாக சிறைவாசம் செய்வது அவ்வப்போது தனது மகளுக்கு எழுதும் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்களை நளினி எழுதியுள்ளார்.
மேலும் இதன் இறுதி அத்தியாயத்தில் கடந்த 2008ம் ஆண்டு பிரியங்கா காந்திக்கும், நளினிக்கும் இடையே நடைபெற்ற சிறப்பு சந்திப்பு பற்றியும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுயசரிதை வரும் 24 ம் தேதி வடபழனியில் வைத்து வெளியிடப்பட உள்ளது.