கரூர் மணல் கொள்ளையில் ஈடுபடும் பாஸ்கர் 'ஓபிஎஸ்' உறவினரா? நல்லகண்ணு பரபர புகார்
கரூர்: கரூர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் பாஸ்கர் என்பவர் தம்மை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உறவினர் என கூறிவருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நலக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
கரூர் மணல் குவாரிகளை மூடக் கோரி நல்லகண்ணு தலைமையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட நல்லகண்ணு உட்பட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் நல்லகண்ணு கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு, மணல் அள்ளப்பட்டு வருகிறது. மேலும் அனுமதி இல்லாமல் பல குவாரிகள் செயல்படுகின்றன.

ஓபிஎஸ் உறவினரா?
தமிழக அரசின் அனுமதியோடு மணல் கொள்ளை நடக்கிறது. கரூரில் உள்ள மணல் குவாரிகளில் அத்துமீறி செயல்பட்டு வரும் பாஸ்கர் என்பவர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உறவினர் என சொல்லிக் கொண்டிருப்பதாக தகவல்வந்துள்ளது.

ரூ5,000 கோடி
பாஸ்கர் என்பவர், அமைச்சர் பன்னீர்செல்வத்தின் உறவினர் என்பது உண்மையாக இருந்தால், அவரை அமைச்சர் பன்னீர்செல்வம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடிரூபாய் வரை மணல் கொள்ளை தாராளமாக நடந்து வருகிறது.

குடிக்க தண்ணீர் கிடைக்காது
இதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஆறுகள் நஞ்சாகி, எதிர்காலத்தில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

மேலாண்மை வாரியம் அவசியம்...
நாட்டில் வேறு சில மாநிலங்களில், நதிநீர் பங்கீடு தொடர்பான விஷயத்தில் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியை பின்பற்றி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.
இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.












Click it and Unblock the Notifications