ஜெஸிலா பானுவின் நம் நாயகம் நூல்: சென்னையில் ஜன.23ல் வெளியீடு
சென்னை: இதிகாசங்களை காப்பியங்களாக படிப்பதை விட சின்னச் சின்ன கதைகளாக படிப்பது எளிதில் மனதில் பதியும், சிறுவர்களும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள். அதே பாணியில் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத சம்பவங்களை 'நம் நாயகம்' என்ற தலைப்பில் குட்டிக் கதைகளாக எழுதியுள்ளார் துபாய் எழுத்தாளர் ஜெஸிலா பானு.
ஜெஸிலா பானு எழுதிய நம் நாயகம் நூல் வெளியீட்டு விழா ஜனவரி 23ம் தேதி சென்னை மைலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற உள்ளது. நம் நாயகம் நூலினை வெளியிட்டு வாழ்த்துகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

இறைத் தூதராய் இந்த உலகில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார்.
நபிகளாரின் போதனைகளை குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக வடித்துத் தந்திருக்கிறார் பானு. இதனால்தான் இந்த நூலைச் சிறாருக்கான சீறா என்று கவிக்கோ அப்துல் ரகுமான் வாழ்த்துரையில் வர்ணித்துள்ளார்.
வரும் 23ம் தேதி சென்னை மைலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நம் நாயகம் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
விழாவிற்கு தலைமை ஏற்கிறார் துபாய் ஈடிஏ நிறுவனங்கள் குழும துணைத் தலைவர் செய்யது எம்.சலாஹூதீன். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், வேலூர் லோக்சபா தொகுதியின் முன்னாள் எம்.பி எம். அப்துல் ரகுமான், சாத்தான் குளம் அப்துல் ஜப்பார், திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர். பாண்டியராஜன், ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். புதியதலைமுறை இதழின் ஆலோசகர் மாலன், கவிஞர் யுகபாரதி ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். ஏற்புரை வழங்குகிறார் ஜெஸிலா பானு. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஆசிக் மீரான்.












Click it and Unblock the Notifications