புறா பிடிக்கப் போய் விபரீதம் – இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலி
நாமக்கல்: புறா பிடிக்கப்போன இடத்தில் இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலியாகிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகிலுள்ள பெரியக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான முருகேசன் மகன் பிரவீன்குமார் , அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் இராஜசேகர் . இவர்களில், பிரவீன் குமார் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். ராஜசேகர் பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார்.
நெருங்கிய நண்பர்களான இருவரும் புதன்கிழமை நடைபெற்ற உள்ளூர் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவில் செங்காடு பகுதியில் உள்ள விவசாயி கந்தசாமியின் என்பவரின் தோட்டத்தில் வளர்த்து வரும் புறாக்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
புறாக்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, புறாக்களின் சப்தம் கேட்டு விவசாயி கந்தசாமி எழுந்து வந்து வீட்டுக்கு முன்னிருந்த மின்விளக்கு போட்டுள்ளார்.
இதனால் புறா பிடிக்கும் முயற்சியை கைவிட்ட மாணவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது, அருகில் உள்ள சின்னத்தம்பி என்பவரின் தோட்டத்தில் இருந்த விவசாய கிணற்றில் இருவரும் தவறி விழுந்தனர்.
அப்போது, சுவரில் மோதியும், உள்ளே இருந்த மோட்டாரில் அடிபட்டும் பலத்த காயமடைந்த மாணவர்கள் இருவரும் கிணற்று நீரில் மூழ்கி இறந்தனர்.
இதுகுறித்து அந்தப் பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில், இராசிபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இருவர் சடலத்தையும் மீட்டனர். இது குறித்து ஆயில்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications