காவிரி மேலாண்மை வாரியம்- நடுவர் மன்றம் வித்தியாசம் தெரியாமல் உளறும் ஸ்டாலின்- நமது எம்ஜிஆர் சுளீர்!
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நடுவர் மன்றம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் மு.க.ஸ்டாலின் உளறியதாக அதிமுகவின் நாளேடான நமது எம்ஜிஆர் விமர்சித்துள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்துக்கும் நடுவர் மன்றத்துக்கும் வேறுபாடு தெரியாமல் உளறிக் கொட்டும் மு.க.ஸ்டாலின்தான் எதிர்க்கட்சித் தலைவரா? என அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர் கடுமையாக சாடியுள்ளது.
இது தொடர்பாக டாக்டர் நமது எம்ஜிஆர் நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
காவேரி மேலாண்மை வாரியத்துக்கும், காவேரி நடுவர்மன்றத்துக்கும் வேறுபாடு தெரியாமல் ஊரே சிரிக்க உளறிக் கொட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்!
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், "நடுவர்மன்றத்தை அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கே அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது" என விளங்காவெட்டியாக மு.க.ஸ்டாலின் வீராவேசம் காட்டிப் பேசவே, நடுவர்மன்றமெல்லாம் 1990-ம் ஆண்டே அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையிட்டதன் பேரில் மத்திய அரசு அமைத்துவிட்டதே, ஆனால் இப்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் வழக்குரைஞர் முகுல் ரோகத்தி, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில்தான் உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்த அடிச்சுவடு கூட தெரியாமல், அதுவும் தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவேரி விவகாரத்தில் இப்படி வாய்க்கு வந்ததை அடிச்சு விடுவதற்குப் பேர் எதிர்க்கட்சித் தலைவரா? என்று அங்கே கூடியிருந்த தி.மு.க.வினரே வெட்கித் தலைகுனிந்தனர்!
அடபோங்கப்பா, ஏற்கெனவே பொன்விளையும் பூமியாம் காவேரிப் படுகை மண்ணை புல்லும் முளைக்காத பாலைவனமாக்க மீத்தேனுக்கு ஒப்பந்தம் போட்டுட்டு, "ஏதோ அறியாத தம்பி புரியாமப் போட்டுபுட்டேன்"னு மன்னிப்பு கேட்ட புண்ணியவானும் இவர்தானே!
அவ்வழியிலேயே இப்போதும் காவேரி மேலாண்மை வாரியத்துக்கும், நடுவர் மன்றத்துக்கும் வேறுபாடு தெரியாத கூமுட்டையாகப் பேசி திருப்பரங்குன்றத்தையும் திகைக்க வைத்திருக்கிறார்!
அதுசரி, அப்பா பேரையே துண்டுச் சீட்டில் எழுதி வைத்துப் படிக்கும் இந்த தண்டத்துக்கு கென்டக்கின்னு விலைபேசி வாங்கப்பட்ட விருதுவேறாக்கும்!
வெட்கம்! வெட்கம்!!
இவ்வாறு நமது எம்ஜிஆர் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.