அண்ணனை பலியிட்டு விட்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார் ஸ்டாலின்.. நாஞ்சில் சம்பத் தாக்கு
உளுந்தூர்ப்பேட்டை: தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சொந்த அண்ணனையே பலியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின் என்று அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
உளுந்தூர்ப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதுதான் இப்படிக் குற்றம் சாட்டினார் சம்பத்.
உளுந்தூர்ப்பேட்டை பஸ் நிலையம் அருகே நடந்த பிரசாரத்தின்போது சம்பத் பேசியதிலிருந்து...
காலத்தின் கட்டாயம்.. அம்மா
முதல்வர் ஜெயலலிதா நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஆனால் பிரசார கூட்டங்களில் அவர் மீது ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது.
சொந்த அண்ணனையே பலியிட்டவர் ஸ்டாலின்
சொந்த அண்ணனை பலிவாங்கி விட்டு அந்த இடத்தை ஸ்டாலின் தக்கவைத்துள்ளார்.
பாக். அட்டூழியம் குறைய அம்மா வர வேண்டும்
இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம், வெளியுறவு கொள்கைகளை காங்கிரஸ் அரசு பாழாக்கியுள்ளது. அதனால் தான் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லையில் வந்து இந்திய ராணுவ வீரரை கொலை செய்கிறார்கள். இந்த நிலை மாற ஜெயலலிதா நாட்டின் பிரதமராக வரவேண்டும்.
கல்வித்துறைக்காக ரூ. 18,000 கோடியை ஒதுக்கியவர் ஜெ.
இந்தியாவிலேயே 18 ஆயிரம் கோடி ரூபாயை கல்வித்துறைக்காக ஒதுக்கி சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவனும் லேப்-டாப்பை கையில் வைத்திருக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர் பிரதமராக வந்தால், தமிழக மக்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்.
அகண்ட பாரதத்தில் செயல்பட
எனவே அவர் அகண்ட பாரதத்தில் செயல்பட அவருக்கு வடிவம் தாருங்கள் என்றார் சம்பத்.