நாஞ்சில் சம்பத் தாயார் மரணம்: ஜெயலலிதா இரங்கல்
சென்னை: அதிமுக முன்னாள் கொள்கைப் பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத்தின் தாயார் கோமதி கடந்த சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 87. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நாஞ்சில் சம்பத் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையைச் சேர்ந்தவர் பாஸ்கர் பணிக்கர். இவரது மனைவி கோமதி. வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவாக இருந்த கோமதி சனிக்கிழமை பிற்பகலில் காலமானார். இவருக்கு கருணாநிதி, நாஞ்சில் சம்பத், ஜீவா, சீதாராமன், ஸ்டாலின், ஷீலா என 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அம்மையாரின் இறுதிச் சடங்கு ஞாயிறன்று காலை 10 மணிக்கு மணக்காவிளையில் நடைபெற்றது.
நாஞ்சில் சம்பத் தாயாரின் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
அ.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தின் தாயார் எம்.கோமதியம்மாள் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
தாயாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் நாஞ்சில் சம்பத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.