அனிதா குப்புசாமி, நிர்மலா பெரியசாமிக்கு ஏன் கார் தரலை.. நாஞ்சில் சம்பத்தின் பதில் என்ன தெரியுமா...?
சென்னை: கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டைச் சுற்றிவந்த என்னிடம் ஒரு கார் கூட இல்லை என்பதை அறிந்த அம்மா கனிவோடு கழகப் பணியாற்ற கொடுத்த அளப்பரிய பரிசுதான் இன்னோவா கார். நான் இன்னும் என்னைத் தகுதியாக்கிக்கொள்ள நாளும் உழைக்கிறேன். தற்போது இணைந்தவர்களும் ஆகப்பெரிய தகுதிகொண்டவர்கள்தான். யாருக்கு எப்போது என்ன செய்யவேண்டும் என்று அம்மாவுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்
டைம் பாஸுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத். நிர்மலா பெரியசாமி, அனிதா குப்புசாமிக்கெல்லாம் ஜெயலலிதா கார் தரவில்லையே என்ற கேள்விக்குத்தான் இப்படிப் பதிலளித்துள்ளார் சம்பத்.
இதுதொடர்பாக அவர் டைம் பாஸுக்கு அளித்த பேட்டி...
முள்ளிவாய்க்கால் முற்றம்
கேள்வி - ஈழ ஆதரவாளர் என்ற முறையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் - முதலில் அதை அவசரக்கோலமாய் திறந்ததே தவறு. மேலும் அரசுக்குச் சொந்தமான இடத்திலோ நெடுஞ்சாலையின் இடத்திலோ ஓர் ஆக்கிரமிப்பு இருந்தால், அதை அகற்ற எந்த அதிகாரியும் முதலமைச்சரிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். தமிழகம் முழுவதிலும் எவ்வளவோ ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது, அது போலவேதான் இதுவும்.
இரட்டை வேடம் இல்லையா...
கேள்வி- அது சரி. ஆனால், முதல்நாள் சட்டமன்றத்தில் ஈழ ஆதரவுத் தீர்மானம், மறுநாள் நினைவு முற்றம் இடிப்பு என்பது இரட்டை வேடம் இல்லையா?''
பதில்- சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் என்பதில் கடுகளவேனும் யாருக்கும் ஐயம் இருக்காது. ஆனால் அதற்கும் அரசின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் முடிச்சு போடுவது அபத்தம். அம்மா அவர்களைத் தவிர யாருக்கும் இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரும் தைரியம் வராது.
நெடுமாறன் விமர்சிக்கிறாரே
கேள்வி - நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் இதுநாள் வரையில் கலைஞரைத்தான் துரோகி என்று கடுமையாக விமர்சித்துவந்தனர். முள்ளிவாய்க்கால் முற்றச் சம்பவத்துக்குப் பிறகு ஜெயலலிதாவையும் விமர்சிக்கத் துவங்கியுள்ளனரே?.
பதில் - தமிழ்நாட்டு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், மக்கள் மன்றத்தில் இருந்து மக்களாலே வெளியேற்றப்பட்டவர்களின் வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் இது. இலங்கை மீது பொருளாதாரத் தடை, உலகத் தமிழர்கள் மத்தியில் தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பனபோன்ற வரலாற்று சிறப்புமிகு தீர்மானங்களை வரவேற்று முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவதை விட்டுவிட்டு புலம்பும் அரசியல் அனாதைகளைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சிவாஜி கணேசன் சாகவில்லை
கேள்வி - உங்கள் முன்னாள் தலைவர் வைகோ, 'தமிழக மக்கள் ஜெயலலிதாவின் முகத்தில் காறி உமிழ்வார்கள்' என்று கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?
பதில் - அவர் உணர்ச்சிவசப்படுவது ஒருவித போலித்தனம். அவரால் நினைத்த நேரத்தில் அழ முடியும், சிரிக்க முடியும். நினைத்த நேரத்தில் ஓர் ஆளின் காலை வாரவும் முடியும் கழுத்தறுக்கவும் முடியும். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இன்னும் சாகவில்லை. வைகோவின் வடிவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஜெ. கனவு பலிக்குமா
கேள்வி - ஜெயலலிதாவின் நண்பர் மோடிக்கு ஆதரவு அலை பெருகியிருப்பதாக பா.ஜ.க-வினர் சொல்கிறார்களே. ஜெ.வின் பிரதமர் கனவு பலிக்குமா?
பதில் - அம்மா பிரதமராக வேண்டும் என்பது கோடிக்கணக்கான தமிழர்களின் கனவு. அது நனவாகப்போவதும் உறுதி. 1989-லேயே இந்தியாவில் ஒருகட்சி ஆட்சி முறைக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் அந்த வாய்ப்பு இல்லை என்று தெரிந்த பின்பும் வட இந்திய ஊடகங்களின் துணையோடு இப்படி ஓர் அலை இருப்பதாகக் கிளப்பிவிடுகின்றனர். வாஜ்பாய், அத்வானி இருவரின் வலுவான இரட்டைத்தலைமை உள்ளபோதே தனியாக ஆட்சியமைக்க முடியாதவர்கள் இனி எப்போதும் முடியாது என்பதே உண்மை.
அடிக்கடி அமைச்சர் மாற்றம்
கேள்வி - ஜெயலலிதா அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது என்பது அரசின் நிர்வாகத்தைப் பாதிக்காதா?
பதில் - அம்மா அவர்கள் ஆட்சி புரிவது இது முதல்முறை அல்ல, மூன்றாவது முறை. எனவே அவர்களுக்கு மக்களின் நலனில் யாரைக் காட்டிலும் அக்கறை உண்டு. ஒரு முதல்வரின் உரிமை அது. செயல்பாட்டை சிறப்பாக்கத்தான் அம்மாவின் இந்த முடிவு இருக்கும்.
நல்லாப் பாருங்க.. அது நான்கு இலை
கேள்வி - பறக்கும் குதிரை, தண்ணீர் பாட்டில், இப்போது சிற்றுந்தில் இரட்டை இலை என்று மாறி மாறி உங்கள் சின்னத்தைத் திணிக்கிறீர்களே. இதற்குப் பரவலாகக் கிளம்பியுள்ள எதிர்ப்பு பற்றி?
பதில் -முதலில் சிறிய பேருந்தில் வரையப்பட்டிருப்பது இரட்டை இலை அல்ல. அது நான்கு இலை. காமாலைக்காரனுக்குக் காண்பெதல்லாம் மஞ்சள் என்பது போல் இவர்களுக்கு எங்கெங்கு நோக்கினாலும் இரட்டை இலை பயம் போகவில்லை. இயற்கையோடு இயந்த வாழ்வை வாழச் சொல்வதே அந்த இயற்கைக்காட்சி. சுற்றுச்சூழலின் அவசியத்தை அது வலியுறுத்துகிறது.''
ஏன் தரவில்லை இன்னோவா...
கேள்வி - நீங்கள் அ.தி.மு.க-வில் இணைந்தபோது இனோவா கார் கொடுத்தார்கள். ஆனால் தற்போது அ.தி.மு.க-வில் சேர்ந்துள்ள அனிதா குப்புசாமி, பாத்திமாபாபு, நிர்மலா பெரியசாமிக்கு எல்லாம் ஏன் கார் தரவில்லை?
பதில் - 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டைச் சுற்றிவந்த என்னிடம் ஒரு கார் கூட இல்லை என்பதை அறிந்த அம்மா கனிவோடு கழகப் பணியாற்ற கொடுத்த அளப்பரிய பரிசுதான் அது. நான் இன்னும் என்னைத் தகுதியாக்கிக்கொள்ள நாளும் உழைக்கிறேன். தற்போது இணைந்தவர்களும் ஆகப்பெரிய தகுதிகொண்டவர்கள்தான். யாருக்கு எப்போது என்ன செய்யவேண்டும் என்று அம்மாவுக்குத் தெரியும்!