"தை பிறந்தால் வழி பிறக்கும்".. நாஞ்சில் சம்பத் சூசகம் !
சென்னை: அதிமுகவில் இருந்து தாம் விலகப்போவதாக வெளியான தகவலை அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார். இருந்தாலும் அதிமுகவில் நிலைத்து இருப்பது குறித்து தெரியாது எனவும் கூறியுள்ளார்.
சன்நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாவது: நான் அதிமுகவில் தான் இருக்கிறேன். அதிமுக இயக்கத்தின் பிரச்சாரத்துக்காக எனக்கு வழங்கப்பட்ட கார் என்னிடத்தில் இருந்தது. 8 மாதங்களாக பிரச்சாரம் இல்லை. அதனால் காரை திரும்ப ஒப்படைத்துவிட்டேன்.

அதிமுகவில் தான் தற்போதும் இருக்கிறேன். இருந்தாலும் இனி இலக்கிய உலகத்தில் பணியாற்ற விரும்புகிறேன். அதிமுகவில் இருந்து நான் விலகுவதால் எந்த இழப்பும் வராது. சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என பாஜக விரும்புகிறது. எனவே தமிழகத்தில் நிலவும் இந்த சூழல் மூலம் ஏதாவது விபரீதம் செய்ய பாஜக முயற்சி செய்யலாம். அதை அதிமுக முறியடிக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையை முதல்வர் பன்னீர்செல்வம் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கண்டிக்கவில்லை. பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை வர்தா புயலில் சிறப்பாக செயல்பட்டு சென்னையை மீட்டெடுத்து கொடுத்ததில் பெரும் பங்கு உண்டு.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் என்னுடைய இயல்புக்கு ஒத்துவராது. அதனால் இதுவரை அந்த பதவியை நான் விரும்பவில்லை. வைகோவுக்கு இனி அரசியல் வாழ்வே கிடையாது. மக்கள் நலக் கூட்டணி என்ற உருவாக்கி அதில் இருந்து விலகியதால் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்.
நான் இன்னும் அதிமுகவில் தான் இன்னுமும் நீடிக்கிறேன். நிலைப்பேனா என்று தெரியாது. பொது வாழ்க்கையில் இருந்தே விலக வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறேன். அதனால் என்ன முடிவு எடுப்பேன் என்று எனக்கே தெரியாது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் பண்பாட்டு மரபு. தனிக்கட்சி கூட தொடங்கலாம்.. அதனால் தை மாதம் வரை காத்திருக்கலாம் என நினைக்கிறேன். இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications