தினகரன் முதல்வராக அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்: நாஞ்சில் சம்பத் தடாலடி! எடப்பாடி கோஷ்டி 'ஷாக்'
தினகரன் முதல்வராக அதிமுக தொண்டர்கள் விரும்புவதாக நாஞ்சில் சம்பத் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
சென்னை: டிடிவி தினகரன் முதல்வராக அதிமுக தொண்டர்கள் விரும்புகிறனர் என சசிகலா கோஷ்டியின் நாஞ்சில் சம்பத் தடாலடியாக தெரிவித்துள்ளது புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது. இக்கருத்தால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஜெயலலிதா மறைந்தநிலையில் ஓபிஎஸ் முதல்வரானார். பின்னர் மெல்ல மெல்ல அமைச்சர்களே சசிகலா முதல்வராக வேண்டும் என குரல் கொடுத்தனர்.
சசிகலா
ஒருகட்டத்தில் ஓபிஎஸ் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு சசிகலாவும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட துடித்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அவர் சிறைக்குதான் செல்ல நேரிட்டது.
தினகரன்
அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அதேநேரத்தில் அதிமுகவின் துணைப் பொதுச்செயலரானார் டிடிவி தினகரன். அப்போதும் தினகரன் முதல்வராக வேண்டும் என குரல்கள் கிளம்பின. அத்துடன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரனே போட்டியிட்டார்.
ஆர்கே நகர் தேர்தல்
இதனால் தினகரன் வென்றால் முதல்வராவார் என கூறப்பட்டது. ஆனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலே நடைபெறவில்லை. அத்துடன் தினகரனும் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது தினகரன் ஜாமீன் விடுதலையாகிவிட்டார்.
நாஞ்சில் சம்பத்
இந்நிலையில் தினகரன் முதல்வராக வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் எழுந்துள்ளன. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் முதல்வராக வேண்டும் என அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றன. தினகரன் முதல்வராவதற்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கிறது எனவும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இந்த கருத்து முதல்வர் எடப்பாடி கோஷ்டியை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.