மெர்சல் படத்தை நெட்டில் பார்த்த எச். ராஜாவை போலீசார் கைது செய்ய நாஞ்சில் சம்பத் வலியுறுத்தல்
மெர்சல் படத்தை நெட்டில் பார்த்த எச். ராஜாவை போலீசார் கைது செய்ய நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்த பாஜக தேசிய செயலர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என அதிமுக அம்மா அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றிய கருத்தை எச்.ராஜா விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது. அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி, சொர்க்க வாசல் போன்றவை திராவிடர் இயக்கத்திற்கு புத்துணர்ச்சியை அளித்தது.
கருணாநிதியின் பராசக்தி, திரும்பிபார் போன்ற படங்கள் தமிழகத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இளைஞர்களின் ஆதரவை பெற்றுள்ள நடிகர் விஜய், ஜி.எஸ்.டியை பற்றி ஒரு வார்த்தை கூறியதற்காக எச்.ராஜாவும், தமிழிசையும் பேசி வருவது வருத்தம் அளிக்கிறது.
மெர்சல் படத்திற்கு இருவரும் விளம்பரம் தேடி தருகின்றனர். இதற்கு நடிகர் விஜய் நன்றி கடன்பட்டுள்ளார். மெர்சல் படத்தை இண்டர்நெட்டில் பார்த்த எச்.ராஜா மீது போலீசார் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கு தண்டனை கிடைக்க போகிறது. இதை மறைப்பதற்காக ஸ்டாலின் தற்போது எழுச்சி பயணம் என அறிவித்துள்ளார்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications