கடலூர் அருகே சினிமா சூட்டிங் என டபாய்த்து ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் இன்று காலை நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு நடத்தினர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சினர் 28 பேரை கைது செய்தனர் போலீசார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை நீடித்து வரும் நிலையிலும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கு தடையை மீறி ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் இன்று காலை நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தீர்மானித்து மைதானத்தை சுற்றி தடுப்பு கம்புகளை கட்டினர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது போன்று மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெற்றன.
அதேநேரம் சினிமா சூட்டிங் நடப்பதாக ஒரு தகவலை அவர்கள் பரப்பி, போலீசாரின் கவனத்தை திசை திருப்பிவிட்டனர். இதன்பிறகு
கிராமங்களில் இருந்து 15 காளை மாடுகளை மைதானத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஒவ்வொரு காளைகளாக மைதான பகுதிக்கு விரட்டி விடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதை அறிந்து திருவந்திரபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
காளைகளை இளைஞர்கள் அடக்குவதை பார்த்து ரசித்து கரகோஷம் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் காளைகளை விரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சினர் 28 பேரை கைது செய்த போலீசார் ஒரு லாரி மற்றும் 4 ஜல்லிக்கட்டு காளைகள் பறிமுதல்.
இது போல் காரைக்குடியில் தடையை மீறி மஞ்சு விரட்டு நடைபெற்றது.












Click it and Unblock the Notifications