நான் ஏற்கிறேன் பொறுப்பு.. நாராயணசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான் முழுப் பொறுப்பேற்பதாக தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுவையில் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்கான மாநில காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, வட்டார மற்றும் முக்கிய அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியில் நாராயணசாமி பேசுகையில், தேர்தலை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக உழைத்தனர். இந்த விஷயத்தில் கட்சியினரை விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் தனிப்பட்ட முறையில் யார் மீதும் துவேசம் கொண்டு பேசுவதில்லை. மக்கள் நலனை முன்னிறுத்தியே இதுவரை பேசி வந்துள்ளேன்.
இந்த தேர்தல் தோல்விக்கு யாருமே பொறுப்பேற்க வேண்டாம். தோல்விக்கு நானே முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்கிறேன். தோல்வியால் நான் மாநில அரசியலுக்கு வந்துவிடுவேன் என அனைவரும் அச்சப்படுகின்றனர். யாருடைய பதவிக்கும் நான் இடையூறாக இருக்கமாட்டேன். உங்கள் கட்சிப்பணிகளை தொய்வின்றி தொடரவேண்டும்.
என்னை பொறுத்தவரை அன்னை சோனியாகாந்தி சொல்வதுதான் வேதவாக்கு. அவர்கள் என்ன சொல்கிறார்களோ? அவர்களது ஆணையை ஏற்று நான் செயல்படுவேன் என்றார் சாமி.












Click it and Unblock the Notifications