ஜெ. புலி… மோடி பாம்பு… அன்பழகனின் மிருகப் பேச்சு
நெல்லை: தமிழக முதல்வர் ஜெயலலிதா புலி என்றால்... குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பாம்பு போன்றவர் என்று திமுக பொதுச்செயலாளர் கே. அன்பழகன் கூறியுள்ளார்.
நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து ஆலங்குளத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பேசியதாவது:
கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்திய பல நல்ல திட்டங்களை ஜெயலலிதா முடக்கி விட்டார். காங்கிரசும் திமுகவும் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறுகிறார்.
ஜெயலலிதாவை விட துரோகம் செய்தவர் யார். கருணாநிதி ஆட்சியில் மின்வெட்டு அதிகம் உள்ளது என்று அவர் கூறியிருந்தார். தற்போது மின்வெட்டு 10 மணி நேரமாகி விட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.
இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு மின்கட்டணத்தை ரத்து செய்தது கருணாநிதி ஆட்சிதான். திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் ஒரு லிட்டர் பால் ரூ.15க்கு கொள்முதல் செய்யப்பட்டு ரூ.17க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பால் விலை ரூ.24ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா என்ற புலியிடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறினால் அங்கு மோடி என்ற பாம்பு இருக்கிறது. குஜராத்தில் இந்து, முஸ்லிம் கலவரம் ஏற்பட காரணமாக இருந்தவர் மோடி. பாபர் மசூதி இந்தியாவின் சொத்து. அதை அழிக்க கரசேவைக்கு ஆயிரம் பேரை அனுப்பி வைத்து துணை நின்றவர் ஜெயலலிதா.
எங்களுக்கும் காங்கிரசுக்கும் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். அதனால் தற்போது ஒதுங்கியுள்ளோம். சமுதாய சார்பற்ற ஆட்சியை காங்கிரசார் நடத்தினர். தமிழர்களின் நலனையும், தமிழையும் புறக்கணிப்பவர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications