கார் விபத்து: நடிகர் நாசரின் மகன் படுகாயம், உறவினர் மகன் உள்பட 3 பேர் பலி
சென்னை: நடிகர் நாசரின் மகன் பைசல் சென்ற கார் மகாபலிபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர்களில் 3 பேர் பலியாகினர்.
நடிகர் நாசரின் மகன் பைசல் நண்பர்கள் 4 பேருடன் புதுவைக்கு காரில் சென்றிருந்தார். அவர் இன்று புதுவையில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர்களின் கார் இன்று காலை 8 மணி அளவில் மகாபலிபுரம் அருகே உள்ள மணமை கிராமத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த கார் சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பைசல் மற்றும் ஒருவர் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பைசலின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. படுகாயமடைந்த மற்றும் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த தகவல் கிடைத்த உடன் நாசர் தனது மனைவி கமீலாவுடன் மருத்துவமனைக்கு விரைந்தார்.
பலியானவர்கள் சென்னையைச் சேர்ந்த சித்து(22), சங்கர்(23) என்று தெரிய வந்துள்ளது. மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை. படுகாயம் அடைந்த மற்றொருவரின் பெயர் சண்முகசுந்தரம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் பலியானவர்களில் ஒருவர் நாசரின் நெருங்கிய உறவினரின் மகன் என்று கூறப்படுகிறது.
டேங்கர் லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி விபத்து நடந்த உடன் தப்பியோடிவிட்டார். பின்னர் அவர் மகாபலிபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.