முள்ளிவாய்க்கால் முற்றம்: ம.நடராஜன்– ஹூசைனி இடையே மூண்ட 'யுத்தம்'!
சென்னை: போயஸ்கார்டன் போனாலும் உனைக் கொல்வேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் மிரட்டினார் என்று கராத்தே வீரர் ஹூசைனி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்காக சிலை செய்யும் பணியை ம. நடராஜன் தன்னிடம் கொடுத்தார் என்றும் அதற்கான சம்பளப் பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஹூசைனி கூறியுள்ளார்.
சர்ச்சைக்கான காரணங்களையும், கொலைமிரட்டல் பற்றியும் செய்தியாளர்களைச் சந்தித்து ஹூசைனி கூறியதாவது,
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
2011ம் ஆண்டு என்னை சந்தித்த நடராஜன், தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் எனக்கு நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில், இலங்கை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் ஒன்றை அமைத்து வருகிறோம். அதை நான் மட்டும் செய்யமுடியாது என்பதால் பழ.நெடுமாறனை முன்னிறுத்தி அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் .
ஓவியங்கள், சிற்பங்கள்
அந்த உருவாக்கத்தில் ஏதோ ஒன்று குறைகிற மாதிரியே தோணுது. நீங்கள் அதை பார்வையிட்டு ஏதேனும் புதியதாக வடிவமைக்க முடியுமான்னு பாருங்க. செய்கிறீர்களா?'ன்னு கேட்டார். அதற்கு உடனே ஒப்புக்கொண்டேன். ஒருநாள், முற்றத்தை பார்வையிட்ட பிறகு, "முற்றத்தின் 4 அடி சுவருக்கு மேலே 6 அடிக்கு இரண்டு பக்கமும் ஈழத்தமிழர்களின் அவலங்களை சித்தரிக்கிற ஓவியங்களை பேனர் வடிவத்தில் வடிவமைக்கலாம். அதேபோல முற்றத்தின் முன்பகுதி பரந்து விரிந்திருக்கிறது. ஆனால், அது வெறுமையாகவே இருக்கிறது. அந்த முன் பகுதியில் பூமியை உடைத்துக் கொண்டு ஒரு கை எழுந்து வருகிற மாதிரி ஒரு சிலையை வைக்கலாம். அந்த சிலை மிகப்பெரிய எழுச்சியை தமிழர்களிடையே தோற்றுவிக்கும்' என்றேன்.
ரூ. 2 கோடி செலவில்
நடராஜனுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. "அப்படியே ஆகட்டும்' என்ற அவர், "செலவு எவ்வளவு பிடிக்கும்' என கேட்டார். "2 கோடி ரூபாய் தேவைப்படும்' என் றேன். "2 கோடியா?' என கேள்வி எழுப்பியவர், "சிம்பிளா செய்யணும்னா எவ்வளவு செலவாகும்?' என கேட்க, "என்னுடைய உழைப்பிற்கான வெகுமதி இல்லாமல் பொருட்கள் செலவு, ஆள் கூலி, இட வாடகை என 98 லட்சம் ரூபாய் ஆகும்' என்றேன்.
ரூ.20 லட்சம் அட்வான்ஸ்
அதனை ஒப்புக்கொண்ட நடராஜன், "உங்களுக்கான வெகுமதியை வேலை முடிந்ததும் நானே தருவேன். இப்போது வேலையைத் தொடங்குங்கள். எந்த சூழலிலும் இவ்வளவு பெரிய தொகை நெடுமாறனுக்கு தெரிய வேண்டாம். பணம் தொடர்பாக என்னிடம் பேசுங்கள். மற்றதை நெடுமாறனிடம் பேசுங்கள்' என்று அட்வைஸ் செய்துவிட்டு, அட்வான்ஸாக 20 லட்ச ரூபாயை பணமாகக் கொடுத்தார் நடராஜன்.
9 கைகள் கொண்ட சிலைகள்
சிலை வைக்கும் இடத்தில் சர்ச்சை ஏற்படவே ஒரு கை வேண்டாம். 9 கைகள் பூமியை துளைத்துக்கொண்டு சின்னதும், பெரியதுமாக ஒன்றன்பின் ஒன்றாக எழுவதுபோல அமைக்கலாம். அதில், "விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம். ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்' என்கிற வாசகத்தை பொறிக்கலாம்' என்றேன். அருமையாக இருக்கிறது என்று பாராட்டிவிட்டு "அப்படியே சிலையை உருவாக்குங்கள்' என்றனர்.
இளவழகன் உத்தரவு
அதன்படி உருவாக்கிக் கொண்டிருந்தோம். ஃபைபர் மெட்டீரியலில் முடித்து மெட்டலில் வார்க்க வேண்டும். ஃபைபர் வேலை முடிந்த நிலையில், நடராஜனின் நண்பர் இளவழகன் ஃபோன் செய்து "வேலையை அப்படியே நிறுத்துங்கள்' என்றார். காரணம் எதுவும் சொல்லவில்லை. வேலை நின்றது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த 35 தொழிலாளர்களும் நொந்து போனார்கள்.
தடுத்த இளவழகன்
ஒருகட்டத்தில், "செய்த சிலையை முற்றத்தில் வையுங்கள்' என்றார் நடராஜன். அதை வைப்பதற்காக முயற்சித்தபோது இளவழகனும் நடராஜனின் மேனேஜர் கார்த்தியும் என்னிடம், "தமிழ்த்தாயை விட உங்கள் சிலை உயரமாக இருக்கிறது. அதனால் இந்த இடத்திலும் வைக்கக்கூடாது. வேறு ஒரு பகுதியில் வையுங்கள்' என்றனர். இதனால் எங்களுக்குள் ஆர்கியுமெண்ட் பலமாக எழுந்தது. இதனால், உருவாக்கப்பட்ட சிலையை அமைக்க முடிய வில்லை. நடராஜனிடம் இது குறித்து சொன்னபோதும் அவரும் ஏனோ அமைதியாகவே இருந்துவிட்டார்.
கைதான நடராஜன்
இந்தநிலையில்தான் நடராஜன் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருடன் கட்சிக்காரர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று மேடம் (ஜெயலலிதா) அறிக்கையும் கொடுக்கவே, நான் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, வாங்கிய பணத்துக்கான வேலைகளை மட்டும் செய்து கொடுப்பது என்று முடிவெடுத்தேன்.
சிற்பங்களை கேட்ட ஏர்போர்ட் மூர்த்தி
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை என்னுடைய அலுவலகத்துக்கு வந்த ஏர்போர்ட் மூர்த்தி, இளவழகன் ஆகியோர் என்னிடம், 'சிற்பங்களை எப்போது கொடுப்பீர்கள்?' என்று கேட்டனர். நான், 'இன்னும் மீதித் தொகை 23 லட்சம் மற்றும் எனக்கான சம்பளத்தைக் கொடுத்தால் உடனே கொடுத்துவிடுவேன்' என்று சொன்னேன்.
மிரட்டிய நடராஜன்
அவர்கள் இங்கிருந்து கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட இளவழகன், என்னை நடராஜன் வீட்டிற்கு வரச்சொன்னார். அங்கே 'என்னிடம் நீ எந்தப் பணமும் வாங்கவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுப் போ' என்று நடராஜன் கூறினார்.
விடுதலைப்புலிகளை வைத்து
நான் மறுத்தேன் அதற்கு அவர், 'நீ கராத்தேகாரன் என்றால் பெரிய இவனா? உன்னை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கிவிடுவேன். எல்.டி.டி.இ பசங்ககிட்ட சொன்னா உன்னை ஒரு நொடியில தட்டிட்டு போய்டுவாங்க' என்றார். நீ எங்கே போவேன்னு தெரியும். அங்கே போனாலும் உன்னை விடமாட்டேன் என்று மிரட்டினார்.
போலீசில் புகார்
திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே நடராஜன் மீது ஒரு புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேராக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போய் புகார் கொடுத்தேன். அத்துடன் சிற்ப வேலைகளை முடிப்பதற்கு அவர்கள் தருவதாகச் சொன்ன தொகையில் 23 லட்ச ரூபாய் வரவேண்டும். அதுபோக வாய்மொழி ஒப்பந்தமாகப் போடப்பட்டுள்ள என்னுடைய சம்பளத் தொகை ஒரு கோடி ரூபாய் வரவேண்டும். அதைக் கொடுத்தால்தான் இப்போது ஃபைபரில் செய்து வைத்துள்ள இந்தச் சிற்பங்களை மெட்டலுக்கு மாற்றித்தர முடியும். அதைக் கொடுத்துவிட்டு இந்தச் சிற்பங்களை அவர்கள் எடுத்துப் போகலாம்'' என்று செய்தியாளர்களிடம் பேசி முடித்தார் ஹூசைனி.
நடராஜன் மீது புகார்
ஹுசைனியின் புகாரின் பேரில் நடராஜன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது திருவான்மியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடராஜன் தரப்போ, ஹூசைனிக்கு 75 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.
எதை நம்பிக் கொடுப்பது?
ஒன்பது கைகளை மட்டும் வெறும் ஃபைபரில் செய்து வைத்துள்ளார். 'இதற்கு 75 லட்சமும் செலவாகிவிட்டது. மற்ற வேலைகளை முடிக்க இன்னும் 25 லட்சம் வேண்டும்' என்கிறார். இவரை நம்பி எப்படி மீதித் தொகையைக் கொடுக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
தகராறு செய்த ஹூசைனி
இதைக் கேட்கப் போன இளவழகன், ஏர்போர்ட் மூர்த்தி, கார்த்திக் என்பவர்களுடன் ஹூசைனிதான் தகராறு செய்துள்ளார். ஹுசைனியின் இடத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். பயந்துபோன ஹுசைனி இரவு 10 மணிக்கு மேல் போய் கமிஷனர் அலுவலகத்தில் நடராஜன் பெயரையும் சேர்த்து பொய்ப் புகார் கொடுத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏகப்பட்ட புகார்கள்
பாஸ்போர்ட் விவகாரத்தில் கைதானது, இப்போது அவர் இருக்கும் வீட்டை அபகரித்தது, மேலும் பெண் விவகாரம் உள்பட பல விவகாரங்களில் முறைகேடு செய்தது என ஹூசைனி மீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. அதனால்தான் கமிஷனர் அலுவலகம் ஓடுகிறார். இதில் நடராஜன் பெயரைச் சேர்த்தால்தான் தன்னுடைய புகாருக்கு ஒரு வெயிட் இருக்கும் என்பதால், அன்று இந்த ஊரிலேயே இல்லாத அவரையும் புகாரில் சேர்த்துள்ளார்'' என்கின்றனர் நடராஜர் ஆதரவாளர்கள்.
சங்கமத்திற்கு செய்த பொம்மைகள்
''மூன்றரை லட்சம் மதிப்பில் செய்யக்கூடிய ஃபைபர் பொம்மைகளை செய்துவிட்டு, அதற்கு 75 லட்சம் செலவாகிவிட்டதாக கூறுவது ஏமாற்றுவேலை என்று முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் பொம்மைகளும் சென்னை சங்கமத்துக்காக செய்யப்பட்டு அதில் காட்சிப்பொருளாக இடம் பெற்றவை. 75 லட்சம் ரூபாயை வாங்கி, சென்னை சங்கமத்தில் பயன்படுத்தப்பட்ட பொம்மைகளை எங்களிடம் தள்ளிவிடப் பார்க்கிறார் ஹுசைனி என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழர்களின் பெயரில்
போரில் சிக்கி உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவுச் சின்னம் இன்னும் எத்தனை சர்ச்சைகளை கிளப்பப் போகிறதோ தெரியவில்லை.