இன்று கிரெடிட் ஆகுமா மகளிர் உரிமைத் தொகை? எதிர்பார்ப்பில் பெண்கள்! விஜய்யின் பதில் என்ன?
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தவெக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்த ஆட்சியிலும் தொடருமா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வழக்கமாக 15ம் தேதி இந்த தொகை பயனாளர்களின் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இன்று தேதி 15.. எனவே பணம் வரவு வைக்கப்படுமா? என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக சாமானிய, கிராமப்புற மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியது.

பணப்புழக்கம் ரொம்பவும் முக்கியமான விஷயம். பொருளாதார வளர்ச்சி வேண்டும் எனில் மக்களிடத்தில் வாங்கும் சக்தி இருக்க வேண்டும். நகர்புற மக்களிடம் இது ஓரளவு இருந்தாலும், கிராமப்புற மக்களிடத்தில் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. எனவே, தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை என்கிற பெயரில், மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் திமுக அரசு வரவு வைத்தது.
எதிர்பார்த்தபடி இது மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க தொடங்கியது. இப்படி இருக்கையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புதியதாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. வழக்கமாக புதிய அரசு பொறுப்பேற்கிறது எனில், பழைய அரசின் நலத்திட்டங்கள் கைவிடப்படுவது, அல்லது புதிய பெயரில் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கைவிடப்படுமோ என்று அச்சம் எழுந்திருந்தது.
இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விளக்கமளித்த முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே தொடரும் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில், நேற்றைய தினம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் நிதி விடுவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இப்படியாக பழைய திட்டங்கள் தொடர்வதை முதலமைச்சர் விஜய் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். நான் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2500 கொடுப்பேன் என்று விஜய் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். எனவே இந்த மாதம் அவர் சொன்னதை போல ரூ.2500 வருமா? என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திட்டத்தை சீரமைக்க விஜய் கால அவகாசம் கோரியிருக்கிறார். அப்படியெனில் இன்று பழைய தொகை ரூ.1000 வரவு வைக்கப்படுமா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications