கிட்னி, கல்லீரல் அருமையாக செயல்படுகிறது.. சில தினங்களில் நடராஜன் டிஸ்சார்ஜ்: மருத்துவமனை அறிக்கை
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், அவருக்கு சிகிச்சையளித்த குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததால் நடராஜன் (74), சென்னையிலுள்ள கிளனேஜல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நடராஜன் (74) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை செப்டம்பர் 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. இதனால் அவரது குடும்பத்தார் கவலையில் ஆழ்ந்தனர்.
மோசமான உடல்நிலை
இதையடுத்து அக்டோபர் 2ம் தேதி, இரவு குளோபல் மருத்துவமனை வெளியிட்ட ஒரு அறிக்கையிலும், நடராஜன் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
சர்ச்சைக்குள்ளான அறுவை சிகிச்சை
இந்த நிலையில், மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, தற்போது அந்த அறுவை சிகிச்சை கடந்த 4ம் தேதி, வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த உறுப்பு மாற்று விவகாரம் ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கிட்னி, கல்லீரல் நலம்
இந்த நிலையில், குளோபல் மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கை: கல்லீரல் மற்றும் கிட்னி அறுவை சிகிச்சைக்கு பிறகு, நடராஜன் உடல்நிலை தேறி வருகிறது. இரு உறுப்புகளுமே நன்கு செயல்படுகின்றன.
சில நாட்களில் டிஸ்சார்ஜ்
அவருக்கு பொருத்தப்பட்ட டிரெக்கியோஸ்டமி குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. இப்போது நடராஜன் எந்த ஒரு உபகரணங்களின் உதவியும் இல்லாமல் செயல்பட முடிகிறது. இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து நடராஜன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.