வருமான வரித்துறை நோட்டீஸ்… அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: சோனியா
சென்னை: வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பா.ஜ.க.வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
‘நேஷனல் ஹெரால்டு' நாளேட்டுக்கு சொந்தமான சுமார் ரூ.1.600 கோடி சொத்துக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆஜராகக் கோரி சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அமலாக்கப் பிரிவிடமும் சுப்பிரமணியசுவாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனியா,
''வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. என் மீதும், எனது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது என்றார். இதுபோன்ற நடவடிக்கைகள் நாங்கள் மீண்டும் வேகமாக முன்னேற உதவியாக இருக்கும்'' என்றும் சோனியா கூறியுள்ளார்.