சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு..தீவிரவாதிகள் பற்றி துப்பு தந்தால் ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு
சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் பற்றி தகவல் தந்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த 2014, மே 1 ஆம் தேதி, சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம், ஒன்பதாவது நடைமேடையில், காலை 7:05 மணிக்கு, பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், எஸ் - 4, எஸ் - 5 ரயில் பெட்டியில், இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு, பெங்களூருவில் இருந்து ஆந்திரா சென்ற சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி, சம்பவ இடத்திலேயே பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில், தேசிய புலனாய்வு அமைப்பினர் ஆய்வு நடத்தி, சில ஆதாரங்களை திரட்டினர். ஆய்வுக்கு பின், பாட்னாவில், அப்போதைய பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடியின் உயிருக்கு குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு போல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார், சென்னையில் இருந்து பெங்களூரு வரையிலான ரயில் நிலைய கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, சில ஆதாரங்களை திரட்டினர்.
இச்சம்பவத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் கத்வா சிறையிலிருந்து தப்பிய தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த அஜ்மத்கான், ஜாகீர் உசேன், மெகபூப் உள்ளிட்ட 4 பேருக்கு தொடர்பிருப்பதை தேசிய புலனாய்வு அமைப்பினர் உறுதி செய்துள்ளனர்.
அவர்களுடன் தப்பிய முகமது அஜாதுதீன், முகமது அஸ்லம் ஆகியோர் தெலுங்கானாவில் பதுங்கி இருந்த போது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பில் இதுவரை துப்பு துலக்க முடியாமல் திணறி வரும், தேசிய புலனாய்வு அமைப்பினர், தப்பிய சிமி இயக்கத் தீவிரவாதிகள் பற்றி தகவல் அளித்தால், 10 லட்ச ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.