காதலிக்குத் திருமணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட கப்பல்படை அதிகாரி!
நெல்லை: காதல் தோல்வியால் மனமுடைந்த கப்பல் படை அதிகாரி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் தமிழ்நகர் பகுதியைச் சேர்ந்தவர், தங்கராஜா. இவர் விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மகன் தங்கத்துரை (29). கோவாவில், இந்திய கப்பல் படையில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் அதிகாரியாக பணியாற்றி வந்த தங்கத்துரை, சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தங்கத்துரை தனது அறையில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருமாள்புரம் போலீசார், தங்கத்துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினார்கள். முதல்கட்ட விசாரணையில் தங்கத்துரை, காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும், தங்கத்துரையின் அறையில் போலீசார் நடத்திய சோதனையில், தற்கொலை செய்வதற்கு முன்பு தங்கத்துரை, தன்னுடைய தந்தைக்கு 17 பக்கத்தில் எழுதிய கடிதத்தையும், பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினார்கள். இந்த கடிதங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்டு இருந்தது. அந்த கடிதங்களில் தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எழுதிய கடித்தத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நான் மராட்டிய பெண் ஒருவரை காதலித்தேன். அந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேறு சாதியைச் சேர்ந்தவருக்கு பெண்ணை காதல் திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்.
இதனால், காதலியை திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நான் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் பெற்றோர் உள்பட யாரையும் இந்த தற்கொலை சம்பந்தமாக நீங்கள் அழைத்து விசாரணை நடத்தக்கூடாது.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதே போல், கப்பல்படை வீரர் தங்கத்துரை, தன்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதத்தில், "என்னை நல்லமுறையில் வளர்த்து படிக்க வைத்தீர்கள். என்னை வேலைக்கும் அனுப்பினீர்கள். நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த பெண்ணின் சாதி வழக்கப்படி அடுத்த சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ய முடியாது. இதனால் என்னை அந்த பெண் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த பெண் தற்போது ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணும் நானும் காதலித்த போது பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உள்ளோம். ஒன்றாக இருந்தோம். அப்போது பல்வேறு சம்பவங்கள் நடந்து உள்ளன. அந்த நேரத்தில் அந்த பெண் அப்படி நடந்து கொண்டாள். இதனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை. நான் உயிருக்கு உயிராக காதலித்த அந்த பெண் எனக்கு கிடைக்காததால், நான் வாழ விரும்பவில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று எழுதி இருப்பதாக தங்கத்துரையின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.