நெடுவாசல் மக்களுக்கு மாநில அரசு மீது நம்பிக்கையில்லை - ஸ்டாலின்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் போராடி வரும் மக்களுக்கு தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மாநில அரசு மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே நெடுவாசல் மீது மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
அரசியல் கட்சித்தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். களத்திற்கே நேரடியாக சென்று பேசி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை
முதல்வருடன் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தைக் கைவிடுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார். ஆனாலும் போராட்டம் நீடித்து வருகிறது.

ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நெடுவாசல் செல்வதற்காக திருச்சி சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு உறுதிமொழி அளித்தும் அதை ஏற்க மக்கள் மறுத்து விட்டனர்.

அரசு மீது நம்பிக்கையில்லை
நெடுவாசல் மக்களுக்கு இந்த மாநில அரசு கொடுத்த உறுதி மொழியின் மீது நம்பிக்கையில்லை. எனவேதான் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவதாக கேள்விப்பட்டேன். இந்த அரசு வாய்மொழியாக கொடுக்கும் உத்தரவு ஏற்க முடியாது என்று மக்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அரசு
மத்திய அரசு எழுத்துபூர்வ உறுதி மொழி அளித்தால் மட்டுமே நெடுவாசலில் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க மாநில அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

போலீஸ் குவிப்பு
நெடுவாசலில் இன்று அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வந்து கொண்டுள்ளனர். ஸ்டாலின் வர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications