தூக்குப் போட்டு தற்கொலை செய்வோம்.. மக்கள் ஆவேசம்.. நெடுவாசல், வடகாட்டில் தீவிரமடையும் போராட்டம்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாட்டில் இன்று தூக்குபோடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் இன்று 22வது நாளாக போராட்டம் நடைபெற்றது. கழுத்தில் கயிறு கட்டி தூக்கு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல வடகாட்டில் காய்கறிகள், பழங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடகாடு, கருக்காகுறிச்சி, கோட்டைக்காடு, வாணக்கன்காடு ஆகிய இடங்களில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரி பொருள் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து நெடுவாசல், கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

22வது நாள் போராட்டம்
நெடுவாசல் கிராம மக்கள் கடந்த 22 நாட்களாக அசராமல் போராடி வருகின்றனர். வெளியூரிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றும் இளைஞர்கள் நெடுவாசல் கிராமத்திற்கு வந்து விட்டனர். கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்கள் தங்கள் படிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்கள்.

குளத்தில் இறங்கிய மக்கள்
நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் ஆயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. 21வது நாளான நேற்று மகளிர் போராட்டக்களத்திற்கு தலைமை தாங்கினர். தங்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு பதிலளிக்காததால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் குளத்தில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தூக்குக்கயிறு போராட்டம்
இன்று 22வது நாள் மக்கள் தங்களின் கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடா விட்டால் நாங்கள் தூக்கு போட்டு மரணமடைவதைத்தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர். அப்போது சங்குகள் ஊதி மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

வடகாட்டில் 5வது நாள்
கோட்டைக்காடு மக்கள் ஆட்சியரின் உறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், வடகாட்டில் உள்ள ஆழ் துளை கிணறு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், வடகாடு கிராம மக்கள் கடைவீதியில் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காய்கறிகளுடன் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வடகாட்டில் 200 பேர் காய்கறி, பழங்களுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளத்திவிடுதி, விநாயகம்பட்டி, பாப்பான்மனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொன் விளையும் பூமியை தரிசாக்க வேண்டாம் என்று மக்கள் முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications