பொன். ராதாகிருஷ்ணன் உறுதியை ஏற்ற நெடுவாசல் மக்கள் - போராட்டம் ஒத்திவைப்பு
மக்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வருமாறு நெடுவாசல் கிராம மக்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். இதனை ஏற்று நெடுவாசல் மக்கள் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
புதுக்கோட்டை: போராட்டத்தை கைவிட்டு விட்டால் மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். இதனை ஏற்று நெடுவாசல் கிராம மக்கள் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 22 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் போராடி வருகின்றனர். இன்று தூக்கு போடும் போராட்டம் நடத்தினர். நெடுவாசல் போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது.

இதனிடையே நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அவருடன் பாஜக நிர்வாகி முருகானந்தமும்
வந்திருந்தார்.
கிராம மக்களிடம் பேசிய அவர், விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்தவன் என்றார். புதுக்கோட்டை மாவட்டத்திலும் மிளகு விளைவதை இப்போதுதான் அறிந்து கொண்டேன் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் மீத்தேன் எரிவாயு எடுக்க வேண்டாம் என்ற கருத்து உள்ளது. நெடுவாசலில் நேரில் பார்த்த பிறகுதான் அதன் செழிப்பு புரிந்தது என்று தெரிவித்தார்.
ஏந்த திட்டத்தையும் மக்கள் மீது மத்திய அரசு திணிக்காது என்றும் அவர் கூறினார்.
நெடுவாசல் மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் எடுத்துரைப்பதாக கூறிய அவர், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். பெட்ரோலிய அமைச்சருடன் போராட்டக்காரர்கள் பேச்சு நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிய அவர், தன்னுடைய வார்த்தையை நம்ப வேண்டும் என்றும் தான் பொய் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மக்களின் உணர்வுகளை மத்திய அரசிடம் பிரதிபலிப்பதாக தெரிவித்த அவர், வரும் மார்ச் 15 அல்லது 16ம் தேதி மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். எனவே போராட்டத்தைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு கிராம மக்களின் பிரதிநிதிகள் வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
பொன். ராதாகிருஷ்ணனின் உறுதியை ஏற்க கிராம மக்கள் மறுத்து விட்டனர். பேச்சுவார்த்தையாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், திட்டத்தைக் கைவிடுவதாக உறுதியாக அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொன். ராதாகிருஷ்ணனின் உறுதியை ஏற்ற கிராம மக்கள் மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசலில் நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications