அதிமுகவின் வேதனைகளை சொல்ல 365 நாட்கள் போதாதே...: கருணாநிதி
சென்னை : அதிமுகவின் சாதனைகளைக் கூற 36 நாட்கள் தேவைப்படும் என்று ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால், மக்கள் தங்களது வேதனைகளைச் சொல்ல 365 நாட்கள் போதாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: ''தமிழக சுகாதாரத் துறை, கால்நடைத் துறை, செய்தித் துறை என காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை வேகமாக நிரப்பும் பணிகளில் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக லட்சம் ரூபாய் வரை வசூல் நடப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

காலிப் பணியிடங்களுக்காக பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம். ஏனென்றால் அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைந்தால் இந்த முறைகேடான நியமனங்கள் செல்லாது என்று அரசாணை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.
அதிமுகவின் சாதனைகளைக் கூற 36 நாட்கள் தேவைப்படும் என்று ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால், மக்கள் தங்களது வேதனைகளைச் சொல்ல 365 நாட்கள் போதாது. ஆனால், இதற்கு பதில் சொல்ல வாக்குச்சாவடியில் ஒரு நிமிடம் போதும்.
திமுக ஆட்சிக் காலத்தில் மணிமுத்தாறு, சின்னார், ராஜாத்தோப்பு கிணறு, மோர்தானா, செண்பகத்தோப்பு, வரட்டாறு, ஆண்டியப்பனூர் மேடை போன்ற நீர்த் தேக்கங்கள் கொண்டுவரப்பட்டன. நீர் மேலாண்மை பற்றியும் வேளாண்மை மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றியும் அறிந்திருப்பதால் இத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது வழக்குபோட கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு புதிதாக அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதிகளே ஊழல்வாதிகளாகிவிடக் கூடாது என்பதற்காக திமுக ஆட்சியில் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், பொது வாழ்வில் ஈடுபடுவோருக்குக் கீழே பணியாற்றும் அலுவலர்களுக்கு பாரபட்சமான பாதுகாப்பு அளிக்க அதிமுக அரசு அவசரம் அவசரமாக இப்படியொரு அரசாணையை வெளியிட்டுள்ளது'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications