சிறுவனின் வாயில் துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சென்னை: நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதில் குண்டு பாய்ந்த சிறுவனுக்கு தொண்டையில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. சிறுவனை மிரட்டிய இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில் திங்களன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை இரவில் 16 வயது சிறுவன் ஒருவனை அழைத்து வந்தனர். அவனிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வாயில் வைத்து மிரட்டினார். அப்போது துப்பாக்கி வெடித்து சிறுவனின் தொண்டையில் பட்டு வெளியேறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். இதனால் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டையில் ஆபரேசன்
உடனடியாக இன்ஸ் பெக்டர் புஷ்பராஜ் மற்றம் போலீசாருடன் சேர்ந்து அவனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து சிறுவனுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. இதில் சிறுவன் உயிர் தப்பினான்.
சாலை மறியல்
இச்சம்பவத்தை கண்டித்தும், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று இரவு வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் இந்திரஜித் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாட்சியர் , பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும், எனவே இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை பணியிடை நீக்கம் செய்யலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications