நீட் கருணை மதிப்பெண்.. மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைப்பு
தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்பதால் தற்போது மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: தமிழில் நீட் எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்பதால் தற்போது மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது . இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும்.
அதோடு புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும். அதன்பின் கலந்தாய்வு தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாம் கட்ட நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் 16ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து 2ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குநரகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.