நீட் தேர்வு கெடுபிடி... மாணவர்கள் மன உளைச்சல் - எடப்பாடி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல்
நீட் தேர்வு அறைக்கு செல்லும் போது மாணவர்களை சோதனை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை: நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் தேர்வு அறைக்கு சென்ற போது கடைபிடிக்கப்பட்ட கெடுபிடியால் மாணவ, மாணவிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இத்தகைய கெடுபிடிகள் தேவையற்றவை என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்கச் சென்ற மாணவ, மாணவிகளை சோதனை என்ற பெயரில் கொடுமைக்கு ஆளாக்கினர். மாணவிகள் தலைவிரிகோலமாக தேர்வு மையத்துக்குள் சென்றதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது மனித உரிமை மீறல் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நீட் தேர்வு
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூரில் தேர்வு நடந்தது. குறிப்பாக, சென்னையில் 57 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. தமிழகத்தில் 8 நகரங்களில் மட்டுமே நீட் தேர்வு நடந்ததால் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அவர்களின் பெற்றோர் காலை 7 மணி முதலே தேர்வு மையங்கள் முன் கூடினர்.

தலைவிரி கோலம்
நீட் தேர்வு மையங்களில் தேர்வு மைய அதிகாரிகள் கெடுபிடி காட்டினர். குறிப்பாக மாணவிகளின் பெற்றோர் கடும் அவமானத்தை சந்தித்தனர். தாய் அல்லது தந்தை ஆசையாக தங்கள் மகளுக்கு அணிவித்து இருந்த கம்மல், மூக்குத்தி, கொண்டை மற்றும் ரப்பர்களை அவிழ்த்துவிட்டனர்.

கதறி அழுத மாணவர்கள்
கால் கொலுசும் அகற்றப்பட்டது. பல மாணவிகள் துப்பட்டா இல்லாமல் கூச்ச சுபாவத்துடனே தேர்வு மையத்துக்குள் சென்றனர். இந்த காட்சிகளை பார்த்த பெற்றோர் தேம்பி அழுதனர். சிலர் தங்கள் மகளிடம், நீ டாக்டரே ஆக வேண்டாம். வா திரும்பி போகலாம் என்று அழைத்ததையும் பார்க்க முடிந்தது

அனுமதி மறுப்பு
தேர்வு மையத்தை தேடியே பலருக்கு காலவிரயம் ஏற்பட்டது. இதனால் தேர்வுக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக, தங்களின் மருத்துவர் கனவு பறிபோனதாக சில மாணவர்கள் கதறி அழுதனர்.

திருமாவளவன்
நீட் தேர்வு எழுதப்போன மாணவர்களிடம் இத்தகைய கெடுபிடிகள் அவசியமற்றது என்று அரசியல் கட்சித்தலைவர்கள் கூறியுள்ளனர். விசிக தலைவர் தொல் திருமாவளவன், கெடுபிடிகளால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறினார்.

முதல்வர் பதவி விலகுவாரா?
நீட் தேர்வு கெடுபிடியால் நன்றாக படித்த மாணவர்கள் மன உளைச்சலால் தேர்வு எழுத முடியாமல் தவித்துள்ளனர். இதுபோன்ற கெடுபிடிகள் தமிழகத்தில் மட்டுமே அரங்கேறியுள்ளது. மாணவர்கள் மன உளைச்சலுடன் தேர்வு எழுதியுள்ளனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications