கூடா நட்பால் ஜெயிலுக்குப் போன ஜெயலலிதா.. நெல்லை கண்ணன்
நெல்லை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து இலக்கியவாதியும், காங்கிரஸ் கட்சியின் தலை சிறந்த பேச்சாளராகவும் இருந்த நெல்லை கண்ணன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கூடா நட்பு காரணமாகவே, அறிவிலும், ஆற்றலிலும் சிறந்த ஜெயலலிதா இன்று இந்த நிலையை அடைய நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கண்ணனின் கருத்துக் கட்டுரை....

கூடா நட்பு
அறிவில் சிறந்தவர் ஆற்றலில் சிறந்தவர் நிர்வாகத்தில் சிறந்தவர். முடிவெடுப்பதில் சிறந்தவர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவர்களைத்தான் சொல்லுகின்றேன். கூடாநட்பு கேடாய் முடியும் என்ற தமிழின் பழைய மொழி எப்படிப் பொருந்துகின்றது.

தள்ளிப் போனதால் விளைந்தது என்ன
18 ஆண்டுகள் இந்த வழக்கை தள்ளிக் கொண்டே போனதால் என்ன விளைந்தது. தமிழ்நாட்டின் மன்னர் பரம்பரைகள் கூட நடத்தாத அந்தத் திருமணம் யாரால் மறக்க முடியும். கடைசி நாள் கூட உச்சநீதி மன்றத்தில் இந்தத் தீர்ப்பை 27ம் தேதி சொல்லாமல் தடுக்க வேண்டும் என்று மனு போட வழி காட்டியது யார்.

கசப்பைப் பெற்றது ஏன்
தொடர்ந்து நீதிபதிகளையும் நீதி மன்றத்தையும் நம்பாமல் தொடர்ந்து உயர் நீதி மன்றம் உச்ச நீதி மன்றம் என்று மாறி மாறி நீதி மன்றங்கள் நீதிபதிகளின் கசப்பைப்பெற்றது ஏன்?

அவமானப்படுத்தியது ஏன்
அகில இந்திய அரசியலில் யாரையும் நட்பு வட்டத்தில் வைத்துக் கொள்ளாமல் அவமானப் படுத்தியது ஏன் பொது உடைமை கட்சிகள் உட்பட.

பாஜகவை நம்பியது ஏன்
பாஜகவை விமரிசித்துக் கொண்டே பாஜக தனக்குச் சரியாக இருக்கும் என்று கருதியது ஏன்?

சாமி பேச்சைக் கேட்டுத்தானே அன்று வாஜ்பாயைக் கவிழ்த்தார்
இந்தச் சுப்பிரமணியன் சாமி பேச்சைக் கேட்டுத்தானே வாஜ்பாய் அரசை வீழ்த்தினார். அத்தனையும் இருக்கட்டும். உங்கள் ஆட்சிதானே தமிழ்நாட்டில் நடக்கிறது. இன்னும் நடக்கப் போகின்றது. எதற்கு இத்தனை வன்முறை.

எனக்குப் புரிகிறது
எனக்குப் புரிகின்றது. தொலைகாட்சிகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன்.ஊருக்கு நூறு பேரோ ஐம்பது பேரோ தான் வன்முறையில் ஈடு பட்டனர். ஆனால் எத்தனை சேதம்.

பெருமை சேர்த்த மக்களுக்கு அநாகரீகமான தண்டனை
நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் மக்களுக்கு இப்படி ஒரு அநாகரீகமான தண்டனையைத் தந்த அந்த வன்முறைத் தொண்டர்களின் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பொறுப்பேற்கப் போகின்ற தங்களின் உண்மை விசுவாசி ஒ.பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிடுங்கள்.

கருணாநிதி வாயே திறக்கவில்லை
நீங்கள் மிகவும் நேசிக்கின்ற அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணனிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். கருணாநிதி வாயே திறக்கவில்லை. திறக்கக் கூடாது என்று உணர்ந்திருக்கின்றார். ஏனென்றால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர் என்று சர்க்காரியாவிடம் சான்றிதழ் வாங்கியவர். இன்னும் மகளையும் மனைவியையும் காப்பாற்றப் போராடிக் கொண்டிருப்பவர். பாஜகவைச் சரிக்கட்டி விடுவார் என்றே அனைவரும் நம்புகின்றனர்.

மாறனின் மணிப் பிள்ளைகளும் கைதாவார்கள்
மாறனின் மணிப் பிள்ளைகள் கைதாவார்கள் என்று பலர் சொல்லுகின்றனர். அவர்கள் இன்னும் 21 பண்பலை வானொலிகளைத் தமிழகத்தில் இயக்குவதற்கான அடிப்படை வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். என்ன நம்பிக்கையில். டில்லியில் எப்போதும் நண்பர்களைச் சரியாக்கி வைத்திருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர் எங்கே.. ஜெயலலிதா எங்கே
எல்லோரயும் நட்பு வட்டத்திலே சரியாக முழு மரியாதையோடு வைத்துக் கொண்டு தனது அரசியலை நடத்திய எம்.ஜி.ஆர் அவர்களின் இயக்கம். இன்னும் ஏழை மக்கள் அவரை இதயத்தில் வைத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார் கண்ணன்.












Click it and Unblock the Notifications