இளங்கோவனைக் கண்டித்து தாமிரபரணி பாலம் மீது ஏறி போராட்டம் நடத்திய மேயர் புவனேஸ்வரி
நெல்லை: நெல்லையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைக் கண்டித்து, காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.
மேலும் நெல்லை மாநகராட்சி அதிமுக மேயர் புவனேஸ்வரி தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துப் போராட்டம் நடத்தினார்.
பிரதமர் மற்றும் முதல்வர் சந்திப்பை விமர்சித்த இளங்கோவனை கண்டித்து இன்று மூன்றாவது நாளாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அ,தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லையிலும் போராட்டம் களேபரமாக இருந்தது. நெல்லை வண்ணாரபேட்டையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் அ.தி.மு.க. மேயர் புவனேஸ்வரி தலைமையில் அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பி இளங்கோவனைக் கண்டித்துக் கோஷண் எழுப்பினர்.
பின்னர் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதில் அதிமுகவினர் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முற்றுகை முயற்சிக்கு பின் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்பொழுது ஆற்றுப்பாலத்தில் இருந்து குதிக்க போவதாக மேயர் புவனேஸ்வரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். பின் போலீஸ் சமரசப் பேச்சை ஏற்று மேயர் உள்பட அதிமுகவினர் 60 பேரும் கலைந்து சென்றனர்.