மின்னல் வேக நெல்லை போலீஸ்... ஆசிரியையிடம் நகை பறித்த திருடர்களைத் துரத்திப் பிடித்து மடக்கினர்!
நெல்லை: ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையரை போலீசார் துரத்தி பிடித்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளை என்ஜிஓ காலனி அருகே உள்ள நியூ காலனியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி லோகநாயகி. ஓய்வு பெற்ற ஆசிரியை. நேற்று மாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் லோகநாயகி கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் செயினை பறிக்க முயன்றனர்.

உடனே லோகநாயகி, செயினை இறுக பிடித்து கொண்டு போராடவே கொள்ளையர்கள் அவரை கீழே தள்ளி விட்டு நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். உடனே லோகநாயகி கூச்சல் போட்டார். இதை பார்த்த அந்த வழியாக ஜீப்பில் வந்த ரோந்து போலீசார் கொள்ளையர்களை துரத்தி சென்றனர். சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று புதிய பஸ் நிலையம் அருகே மடக்கி பிடித்தனர். அவர்கள் யார், எந்த ஊரை சேர்நதவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மாநகர துணை கமிஷனர் ராஜன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா சம்பவம் போல் கொள்ளையர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சென்னையில் இப்படித்தான் டூவீலரில் வந்த ஆசிரியையின் கைப்பையைப் பிடுங்கிய கொள்ளையன் கடைசியில் அந்த ஆசிரியை உள்பட இருவரின் உயிரிழப்புக்குக் காரணமானான். ஆனால் நெல்லையில் போலீஸார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு கொள்ளையனைப் பிடித்து அசத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications