கல்வி உதவி தொகை வழங்கக் கோரி மாணவர்கள் போராட்டம்
நெல்லை: கல்வி உதவி தொகையை வழங்க கோரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாசுதேவநல்லூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த எஸ்சி,எஸ்டி பிரிவு மாணவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலக வாசலில் உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், " எங்களுக்கு சென்ற ஆண்டுக்கான கல்வி உதவி தொகை வழங்கப்படவில்லை. ஆனால் கல்லூரி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வி கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு கட்டணத்தை செலுத்த அனுமதிப்போம் என கல்லூரி நிர்வாகம் மிரட்டி வருகிறது.
எங்களுக்கு தேர்வு கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டுகிறோம். மேலும் கால தாமதம் செய்யாமல் எங்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களால் இந்த ஆண்டு தேர்வு எழுத முடியாது. இதனால் ஒரு வருட படிப்பு வீணாக போய் விடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபோல் வடக்கன்குளம் தனியார் பாலிடெக்னிங் எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களும் தங்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தர்ணாவி்ல் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.












Click it and Unblock the Notifications