ஜாதி கொடிகளை ஏற்ற எஸ்பி அதிரடி தடை... நெல்லையில்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஜாதி கொடிகளை ஏற்ற நெல்லை மாவட்ட எஸ்பி திடீர் தடை விதித்துள்ளார். இதனால் ஜாதி கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக ஜாதி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. விழாக்களில் சமுதாய தலைவர்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிவது, உருவ போர்டு வைப்பது, கொடி கம்பம் அமைப்பது, அரசு மின் கம்பம் சுவர் பகுதிகளில் சமுதாய வண்ணங்களை வரைவது போன்றவை அதிகரித்து வருகிறது. இதனால் அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் தென் மாவட்டங்களில் சமுதாய கொடிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட தினங்களில் வைத்து பின்னர் அகற்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளை சமீபத்தில் அறிவித்தது. இதையடுதது நெல்லை மாவட்டம் முழுவதும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளாட்சி அனுமதி பெற்றும், பெறப்பாடமலும் அகற்றப்படாமல் இருக்கும் கொடி கம்பங்கள் மற்றும் போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நெல்லை எஸ்பி கூறியிருப்பதாவது...
நெல்லை மாவட்டத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் வாழவும், சமூக ஓற்றுமை தழைத்திடவும் பிரச்சனைக்குரிய தட்டி போர்டுகள், சுவர்களில் எழுத்தப்பட்டுள்ள சமுதாய சின்னங்களை அந்தந்த பகுதி மக்களே தாமாக முன்வந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி நகரம் மற்றும் கிராமங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள தட்டி போர்டுகள் மற்றும் கொடி கம்பங்களை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் அகற்ற பொது மக்கள் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications