நெல்லையில் விடிய விடிய மழை... அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்ட பகுதிகளில்கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடனா நதி, ரமா நதி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி ராம நதி அணையின் நீர்மட்டம் 55 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 108 கன அடியாகவும் இருக்கிறது. அணைப்பகுதியில் 57 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடனா நதி அணையின் நீர்மட்டம் 52.50 அடியாக இருக்கிறது. அணைக்கு நீர் வரத்து 95 கன அடியாக இருந்து வருகிறது. இந்த அணைப்பகுதியில் 57 மிமீ மழை பதிவாகியுள்ளது. கடையத்தில் 78 மிமீ மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் பிசான பருவ சாகுபடிக்கான பணிகளை தீவிரமாக தொடங்கி வருகின்றனர்.
தூர்வாரக் கோரிக்கை:
மேலும் ரமா நதியின் அணையின் நீர்மட்டம் 53 அடியாக உள்ள நிலையில் அதில் 27 அடி மணல் திட்டுகள், மரங்கள், பறாக்கல்கள் குவிந்துள்ளதால் நீர் இருப்பு 26 அடி மட்டுமே இருக்கிறது. இதனால் அணையை தூர் வார வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்து வருகிறது. இதனால் மழை நீரை கூடுதலாக சேமிக்க முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கிய பயிர்கள்:
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், செங்கோட்டை வட்டாரப் பகுதிகளான மேக்கரை,பிரானூர் ,பண்பொழி,வடகரை ,உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் அறுவடை இயந்திரம் வயல்களுக்குள் சென்று அறுவடை செய்யமுடியாமல் சகதிகளில் சிக்கி திணறும் நிலை உருவாகியுள்ளது. இதனால் எராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications