முன்னேறும் காற்றாலை மின்சாரம்... நெல்லை மக்கள் மகிழ்ச்சி
நெல்லை: காற்றாலை மின்சாரம் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில் தற்போது அவை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்று சீசன் காலத்தில் நாள்தோறும் சராசரியாக இரண்டாயிரத்து ஐநூறு மெகா வாட்டுக்கு குறையாமல் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும்.
இந்த நிலையில் கடந்த இரணடு வாரங்களுக்கும் மேலாக காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்தது. தென்மேற்கு பருவமழை சீசன் ஓய்ந்ததால் காற்று வீச்சும் குறைந்தது. கடந்த சில நாட்களாக பூஜ்யம் என்ற நிலைக்கு காற்றாலை மின்சாரம் உற்பத்தி சரிந்தது.
இதனால் பல பகுதிகளில் தினந்தோறும் 2 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு தலை தூக்கியது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும் பகல் 12 மணி முதல் 1 மணி வரையும், இரவு 6 மணி முதல் 7 மணி வரையும் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு காற்றாலை மின் உற்பத்தி திடீரென அதிகரித்தது. அப்போது 1798 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இது அதிகாலை திடீரென 439 மெகா வாட்டாக குறைந்தது. பின் மீண்டும் 806 மெகா வாட்டாக திடீரென அதிகரித்தது. சராசரியாக 628 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதர மின்சாரம் வெளி இடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.