நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு- தேனி மாவட்டத்தில் வைகோ பாதையாத்திரை
நியூட்ரினோ திட்டத்திற்குப் எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் பாதையாத்திரை செல்லப்போகிறார்.
சென்னை: நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்த வழக்குகளும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இருப்பினும் இத்திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
இதனை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரும் 31ந் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை தேனி மாவட்டத்தில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், பொட்டிப்புரம், சிலமலை, ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் நடைபயணம் செல்ல உள்ளதாக மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு
கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால், இப்பகுதியில் உள்ள முல்லை பெரியாறு, கேரளத்தின் இடுக்கி அணை ஆகியவை இடிந்துவிடக் கூடிய ஆபத்து உள்ளது.
தமிழ்நாடு ஏன்?
கேரளாவில் இருந்து குஜராத் வரை மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. ஏன் அங்கெல்லாம் இந்த திட்டத்துக்கு இடம் தேர்வு செய்யப்படவில்லை. நியூட்ரினோ திட்டத்தை குஜராத்தில் செயல்படுத்த வேண்டியது தானே. இந்தியாவை வல்லரசாக்க தமிழகம் என்ன பரிசோதனைக்கூடமா?
நியூட்ரினோவிற்கு எதிர்ப்பு
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு மத்திய அரசு கடும் நெருக்கடியை தருகிறது. அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம்தான் இதற்கு காரணம். எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக பாடுபடுகின்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து மக்களுடன் இணைந்து குரல் கொடுத்தால்தான் இத்திட்டத்தை தடுக்க முடியும் என்று கூறினார்.
விழிப்புணர்வு பிரச்சாரம்
வரும் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதிவரை 10 நாட்கள் வைகோ பாதையாத்திரையாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செல்லப்போகிறார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி ஏற்கனவே பாதையாத்திரை சென்றுள்ளார் வைகோ.