கிருஷ்ணகிரியிலும் கொடுமை- சாலையோரத்தில் வீசப்பட்ட ஆண்குழந்தை மீட்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் கிடந்த பிறந்த சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம்-எலத்தகிரி சாலையில் உள்ள நாகம்பட்டி சந்திப்பு சாலை அருகிலுள்ள மேல் நிலை குடிநீர்த் தொட்டிக்கு அருகில் குடிநீர் வடிகால் வரிய அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்துக்கு இயக்குநர் சின்னசாமி வியாழக்கிழமை காலை சென்றபோது, சாலையோரத்தில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. குழந்தையின் சத்தம் வந்த பகுதிக்கு சென்று அவர் பார்த்த போது, பிறந்த சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று துணியில் சுத்தப்பட்ட நிலையில் கிடந்தது. குழந்தையை கண்ட அவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
108-ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கலைசெல்வி, ஓட்டுநர் கேசவன் ஆகியோர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சாலையோரம் கிடந்த அந்த குழந்தையை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸார், சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் பச்சிளம் ஆண் குழந்தையின் தாய் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மீட்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications