ஜெ.வைப் போலவே லிப்ட் வசதிகளுடன் தமிழிசைக்கும் புதிய பிரச்சார வேன் தயார்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்காக லிப்ட் வசதியுடன் கோவையில் தயாரிக்கப்பட்ட புதிய பிரச்சார வேன் சென்னை வந்துள்ளது.
மக்களுக்காகவே நான் என பிரச்சாரங்களில் சொல்லிக் கொள்ளும் தலைவர்கள், தங்களுக்கான வசதிகளை பெரும்பாலும் விட்டுத்தர விரும்புவதில்லை. கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் சாலையிலோ, பொதுக்கூட்ட மைதானத்திலோ காத்திருக்க, இவர்கள் ஒய்யாரமாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்களிலோ, மேடையிலோ நின்று ஆவேசமாகப் பேசுவார்கள்.

அந்தவகையில், வழக்கம்போல இம்முறையும் தலைவர்கள் பிரச்சார வாகனங்கலை தங்கள் வசதிக்கு ஏற்ப தயாரித்துள்ளனர்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிரச்சார வேனில் லிப்ட் வசதி இருக்கும். அதன் மூலம் நேரடியாக மேடைக்கு செல்ல முடியும். அதோடு, வேனின் நடுவே உள்ள மேடையில் நின்ற பின்னர் ஸ்விட்ச்சை போட்டால், லிப்ட் உயர்ந்து, மேற்கூரையில் வழியாக தோன்றி பேச வசதியாக இந்த லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அதைப் போலவே லிப்ட் வசதியுடன் கூடிய புதிய பிரச்சார வேன் ஒன்றை தயார் செய்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. இந்த வேன் கோவையில் உருவாக்கப்பட்டது.
இதில், ஒரு ரோலிங் சேர், படுக்கை, நவீன கழிப்பிடம் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. குளிர்சாதன வசதி, அதிநவீன சஸ்பென்சன் வசதிகளும் அதில் உள்ளன.
இந்த பிரச்சார வேனின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1 கோடி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இது வெறும் ரூ. 50 லட்சம் தான் என்கின்றனர் பாஜகவினர்.
நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து இந்த பிரச்சார வேனில் தனது பிரச்சாரத்தை தமிழிசை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications