வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கிளப்பிய புதிய சர்ச்சை!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இறந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக இளங்கோவன் அவதூறாகப் பேசியதாகத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இளங்கோவனுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜி.கே.வாசன் இறந்துவிட்டார் என்று இளங்கோவன் கூறியது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மது விலக்கை அமல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 14-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் இளங்கோவனிடம், முதல்வர் ஜெயலலிதா வைத்துள்ள கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு இளங்கோவன், வாசன்தான் இறந்துவிட்டாரே என்று கூறிவிட்டு செல்லத் தொடங்கினார். பிறகு சுதாரித்துக் கொண்டு நான் மறைந்த எஸ்.எஸ்.வாசனைத்தான் கூறினேன் என்று இளங்கோவன் சமாளித்தபடி கூறி சென்றார்.
இது தொடர்பான காட்சிகள் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இளங்கோவனின் கருத்துக்கு எதிராக த.மா.கா.வினர் கொந்தளித்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications