அரை கிலோ குண்டு வெடித்தாலும் பாதிப்பில்லை... சென்னை வெடிகுண்டு நிபுணர்களுக்கு புது கவச உடை!
சென்னை: சென்னை போலீசில் பணியாற்றும் வெடிகுண்டு நிபுணர்களுக்கு புதிய பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை அணிந்து கொண்டால் அரை கிலோ குண்டு வெடித்தாலும், வெடிகுண்டு நிபுணர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாது.
சென்னை நகர போலீசின் ஒரு அங்கமாக செயல்படுகிறது எஸ்.சி.பி. எனப்படும் பாதுகாப்பு பிரிவு. சென்னையில் மிக முக்கிய பகுதிகளாக கருதப்படும் தலைமைச்செயலகம் செயல்படும் கோட்டை, கிண்டி கவர்னர் மாளிகை, டி.ஜி.பி.அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காவல் பணிகளை இவர்கள் செய்கின்றனர்.

அதோடு பாதுகாப்பு பிரிவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தல், அவற்றை செயல் இழக்கச் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் பிரிவு பி.டி.டி.எஸ். ஆகும். இதில் பணியாற்றும் நிபுணர்கள் உயிரைப் பணயம் வைத்தே பணியாற்றி வருகின்றனர். மக்களைப் பாதுகாக்கும் பணியில் சமயங்களில் பரிதாபமாக இந்த நிபுணர்கள் உயிரை இழக்கவும் செய்கிறார்கள்.
எனவே, இத்தகைய அபாய தருணங்களில் வெடிகுண்டு நிபுணர்களின் உயிருக்கு பாதுகாப்பு தரும் வகையில், புதிய கவச உடைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த கவச உடைகள் அரை கிலோ எடையுள்ள குண்டுகள் வெடித்தாலும், நிபுணர்களைக் காப்பாற்றும் திறன் பெற்றவை.
தங்களது உயிரைப் பாதுகாக்கும் விதமாக புதிய கவச உடைகளைத் தந்த அரசுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளையும் அரசு கனிவுடன் நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications