திருவிழாவிற்கு கணவர் அழைத்துச் செல்லாததால் தற்கொலை செய்த புதுப்பெண்!
சென்னை: மதுரவாயல் அருகே திருவிழாவிற்கு கணவர் அழைத்துச் செல்லவில்லை என்பதால் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மதுரவாயலை அடுத்து உள்ள ஆலப்பாகத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்(39). தனியார் நிறுவன ஊழியர். அவருக்கும், கனிமொழி(29) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் கனிமொழியின் அம்மா ஊரில் 3 நாட்கள் நடக்கும் கோவில் திருவிழா துவங்கியது. திருவிழாவிற்கு தன்னை அழைத்துச் செல்லுமாறு அவர் வேல்முருகனிடம் கேட்க அவர் அழைத்துச் செல்லவில்லையாம்.
இதனால் கனிமொழி மனமுடைந்துள்ளார். இந்நிலையில் திருவிழாவின் கடைசி நாள் அன்று மனைவியை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேல்முருகன் முடிவு செய்தார். அவர் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் விடுப்பு எடுத்தார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு வந்தபோது கனிமொழி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இகு குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனிமொழியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணமாகி வெறும் 9 மாதங்களே ஆவதால் அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.