பிரிந்து கிடந்தாலும் ஒரே முடிவுதான்.. அமித் ஷா கேட்டதால் ராம் நாத்துக்கு ஆதரவு.. ஓபிஎஸ் விளக்கம்
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரிக்குமாறு அமித் ஷா கேட்டுக் கொண்டதால் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பது என தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.
இந்த நிலையில், யாரை ஆதரிப்பது என ஓபிஎஸ் அணியினர் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், எடுக்கப்பட்ட முடிவு குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமித் ஷா கேட்டார்
பீகார் மாநில ஆளுநராகவும், சிறந்த நிர்வாகியுமான ராம் நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரிக்குமாறு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
ஆதரவு அளித்தோம்
அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்று பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பது என ஒருமனதாக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எங்கள் அணியில் உள்ளவர்கள் ராம் நாத்தை ஆதரித்து வாக்களிப்போம்.
தலித் ராம்நாத்
ஜனாதிபதியாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பாஜக அறிவித்துள்ளது. எனவே, நாங்கள் ராம் நாத் கோவிந்துவை ஆதரிப்பது என முடிவெடுத்துள்ளோம். மேலும், ராம் நாத் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பீகார் ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றியவர். சிறந்த அனுபவம் மிக்கவர்.
காங்கிரஸ் பற்றி யோசிக்கவில்லை
காங்கிரஸ் கட்சி வேறு வேட்பாளரை அறிவிக்கப் போவது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. இப்போது பாஜகவால் அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் பற்றி மட்டுமே யோசித்து முடிவெடுத்துள்ளோம் என்று ஓபிஎஸ் கூறினார்.